அழுகிப் போன உடல்கள்.. அலறடித்த ஜோன்ஸ்டவுன்.. ஒரு குட்டி டெரர் தொடர் (4)
"Guys, I sense something wrong. We will move from here. Hurry up"
"பிடிங்கடா அவனுகளை.. ஒருத்தன் தப்பக் கூடாது. நிக்க வச்சு சுடு.. நெத்தியிலேயே சுடு.. சாகட்டும் நாய்ங்க"
சடசடசடசடசடசடசட....
உடம்பெல்லாம் சல்லடையாக துளைத்தெடுத்த புல்லட்டுகள்.. ரத்த சகதியில் செத்து விழுந்தனர் ரியானும், அவருடன் வந்த பத்திரிகையாளர்களும்.. ஈவு இரக்கமின்றி நெருக்கத்தில் வைத்து கொடூரமாக சுட்டுக் கொன்றது அந்தக் கும்பல்.
யார் இந்த ரியான்.. ஏன் இப்படி செத்துப் போனார்...?
70களில் கயானாவை உலுக்கியவர் ஜிம் ஜோன்ஸ். நானே கடவுள் என்று கூறிக் கொண்டார். பீப்பிள்ஸ் டெம்பிள் என்ற அமைப்பை உருவாக்கினார். கயானாவில் தான் நிர்மானித்த இந்த சாம்ராஜ்ஜியம் அமைந்த பகுதிக்கு ஜோன்ஸ்டவுன் என்றும் பெயரிட்டுக் கொண்டார்.
50களின் இறுதியில்தான் இந்த அமைப்பை உருவாக்கினார் ஜோன்ஸ். இது இனவெறிக்கு எதிரான அமைப்பாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது. ஆனால் படு வேகமாக பல கெட்ட பெயர்களை சம்பாதித்தது. நிதி முறைகேடு, குழந்தைகளை பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்துவது என பெயர் கெட்டுப் போனது.
இதையடுத்து அமெரிக்க எம்.பி. ஒருவரின் தலைமையிலான ஒரு குழு (பத்திரிகையாளர்களும் இதில் அடக்கம்) இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஜோன்ஸ்டவுன் அனுப்பப்பட்டது. ஜோன்ஸ்டவுனுக்கு வந்த இந்தக் குழுவினர் தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்தக் குழுவின் தலைவர்தான் எம்.பி. லியோ ரியான்.
ஜோன்ஸ் அமைப்பின் உறுப்பினர்கள் சிலரிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தார் ரியான். அப்போது ஒருவர் ரியானை தனியாக அழைத்தார். அவருடன் போனார் ரியான்.
"ரியான் இங்கிருந்து எத்தனை சீக்கிரமாக கிளம்ப முடியுமோ போய்ருங்க"
"ஏன்.. என்னாச்சு"
"உயிர் வேண்டுமா.. ஓடிருங்க"
ரியானுக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் ஏதோ தப்பாகப் பட்டது அவருக்கு. உடனடியாக தனது குழுவினரை அழைத்த அவர் "Guys, I sense something wrong. We will move from here. Hurry up"
ஜோன்ஸுக்கு மூக்கில் வியர்த்து விட்டது. தனக்கு நெருக்கமான நபர்களை அழைத்தார்.
"ரியான் குரூப் இங்கிருந்து உயிரோடு போகக் கூடாது. ஒருத்தர் கூட உயிரோடு இருக்கக் கூடாது. நம்ம பகுதியைத் தாண்டும் வரை தடுக்காதீங்க. அதற்குப் பிறகு தடுத்து நிறுத்தி சுட்டுக் கொல்லுங்க"
உத்தரவை ஏற்ற கூட்டாளிகள் துப்பாக்கி சகிதம், ரியான் குழுவினரை பின் தொடர்ந்தனர். சரியான இடம் வந்ததும் கூட்டத்தில் ஒருவன் அலறினான்.
"பிடிங்கடா அவனுகளை.. ஒருத்தன் தப்பக் கூடாது. நிக்க வச்சு சுடு.. நெத்தியிலேயே சுடு.. சாகட்டும் நாய்ங்க"
அடுத்த சில விநாடிகளில் எல்லாம் முடிந்தது.
மறுபக்கம்... ஜோன்ஸுடன் இருந்த ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து தப்ப முயன்றனர். கலகம் வெடித்தது. கடும் கோபமடைந்தார் ஜோன்ஸ். அனைவரையும் கூட்ட மைதானத்திற்கு வரவைத்தார். அனைவரும் கூடினர்.
அவர்களிடம் கையில் ஒரு கோப்பை கொடுக்கப்பட்டது. அனைவரையும் அதை குடிக்குமாறு கூறினார்.
முதலில் குழந்தைகளுக்கு கோப்பையில் இருந்தது கொடுக்கப்பட்டது. அது கொடிய சயனைடு விஷம்.
குடித்த குழந்தைகள் பொத் பொத்தென்று பரிதாபமாக உயிரிழந்தன. மொத்தம் 276 குழந்தைகள் கொடூரமாக கொல்லப்பட்டனர்.
அடுத்து பெரியவர்களுக்கு விஷம் தரப்பட்டது. மொத்தமாக அந்த இடமே சுடுகாடானது. ஜோன்ஸ் கும்பல் அங்கிருந்து தப்பிப் போனது.
ரியான் குறித்த தகவல் தெரியாததால் ஹெலிகாப்டரில் ஒரு மீட்புப் படை விரைந்து வந்தது. ஜோன்ஸ்டவுனில் உள்ள ஜோன்ஸ் அமைப்புக்கு மேலே அது வட்டமடித்தபோது கீழே உயிரிழந்த உடல்கள் கிடப்பதைப் பார்த்து அதிர்ந்தனர்.
அத்தனை உடல்களும் அழுகிப் போய்க் கிடந்தன. சிலர் உயிரோடு காணப்பட்டனர். மொத்தமாக 1000 உடல்களை மீட்புப் படையினர் அப்புறப்படுத்தினர். அந்த இடமே நரகம் போல காணப்பட்டது.
செப்டம்பர் 11 தாக்குதலுக்கு முன்பு வரை அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான, குரூரமான படுகொலையாக இந்த ஜோன்ஸ்டவுன் கொலைகள்தான் இருந்து வந்தன.
உலகம் ஒரு பக்கம் உயிர்ப்போடு இயங்கிக் கொண்டிருந்தாலும்.. மறுபக்கம் மரணக் கிணறுகள் பலரை காவு வாங்கிக் கொண்டுதான் உள்ளன.. நம்பிக்கை மூட நம்பிக்கையாக மாறும்போது இந்த மரண தேவனின் தாகம் மேலும் கூடி விடுகிறது.
(முற்றும்)