இறுதிப் போர் கொலைகள்: ஐ.நா. விசாரணைக்கு ஒத்துழைக்க இலங்கை திட்டவட்ட மறுப்பு!
ஜெனிவா: இறுதிகட்டப் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்க முடியாது என்று ஐ.நா. சபையில் இலங்கை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 26வது கூட்டம் ஜெனிவாவில் நேற்று தொடங்கியது. இதில், தொடக்க உரையாற்றிய ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை, இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அவரை தொடர்ந்து பேசிய ஐ.நா.வுக்கான இலங்கை தூதர், ஐ.நா.வில் கடந்த மார்ச் மாதம், இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மனாத்திற்கு பாதிக்கும் குறைவான கவுன்சில் உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவு அளித்ததாக தெரிவித்தார்.
மேலும், இதன் அடிப்டையில் விசாரணை நடத்த உத்தரவிடுவது இலங்கையின் இறையாண்மையையும், சுதந்திரத்தையும் பாதிக்கும் என்று பேசினார். இந்த விசாரணை மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்துவிடும் என தெரிவித்த அவர், இலங்கையில் நடைபெற்று வரும் தேசிய சமரசக் கொள்கையை, இந்த விசாரணை சீர்குலைத்து விடும் என்றார்.