15,000 அடி உயரம்.. விமான என்ஜினில் பற்றிய தீ.. நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?
அமெரிக்கா: டென்வர் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய பயணிகள் விமானத்தின் என்ஜினில் தீப்பற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நகரில் இருந்து ஹொனலுலு நகருக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 777-200 விமானம் ஒன்று நேற்று (பிப்.20) மாலை கிளம்பியது.
இதில், 231 பயணிகள் மற்றும் 10 விமான ஊழியர்கள் இருந்தனர். விமானம் takeoff ஆன சிறிது நேரத்தில், 15 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, வலது பக்கமிருந்த என்ஜினில் திடீரென தீப்பிடித்தது.
சற்றும் தாமதிக்காத விமானிகள், விமான நிலைய அதிகாரிகளை தொடர்பு கொண்டு, நிலைமையை எடுத்துக் கூறி, மீண்டும் டென்வர் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினர். விமானிகளின் சாமர்த்தியத்தால் மிகப்பெரிய விபத்து தடுக்கப்பட்டது. பயணிகள், ஊழியர்கள் அனைவரும் எந்தவித காயமுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
எனினும் விமானம் மீண்டும் டென்வர் விமான நிலையம் திரும்புவதற்குள், விமானத்தின் என்ஜினில் பற்றிய தீ வேகமாக பரவ, சில பாகங்கள் உடைந்து குடியிருப்புப் பகுதியில் விழுந்தன. இதுகுறித்த புகைப்படங்களும், என்ஜினில் தீப்பற்றிய போது எடுக்கப்பட்ட வீடியோவும் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
26 ஆண்டுகள் பழமையான போயிங் விமான நிறுவனத்தின் 'போயிங் 777-200' விமானத்தில், Pratt & Whitney PW4000 எனும் என்ஜின்கள் தான் பயன்படுத்தப்பட்டன. National Transportation Safety Board (NTSB) இதுகுறித்த விசாரணையை துவக்கியுள்ளது.
பொதுவாக விமான விபத்து என்பது அரிதிலும் அரிதாக நடக்கும் ஒன்றாகும். உலகிலேயே வான் வழி பயணத்திற்கு தான் உச்சக்கட்ட பாதுகாப்பு, சோதனை நடத்தப்படுகிறது. அப்படியிருக்கையில், அமெரிக்கா போன்ற உலகின் மிகப்பெரிய வல்லரசு நாட்டில், அதுவும் போயிங் விமானத்தில் இதுபோன்ற அசம்பாவிதம் ஏற்பட்டால், அங்கு விமான கண்காணிப்பு பணிகள் சிறப்பாக உள்ளனவா என்ற கேள்வி எழுவதைத் தடுக்க முடியவில்லை.