தெரியாமல் எடுத்து வந்த தோட்டாக்களை விமானத்தின் டாய்லெட்டில் பிளஷ் அவுட் செய்த விமானி
வாஷிங்டன்: அமெரிக்காவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில், பைலட் தனது துப்பாக்கிக் குண்டுகளை கழிப்பறையில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க விமானங்களில் பைலட்டுகள் துப்பாக்கிகள் வைத்துக் கொள்ள அனுமதி வழங்கப் பட்டுள்ளது. இரட்டைக் கோபுரத் தாக்குதலைத் தொடர்ந்து இந்த அனுமதி வழங்கப் பட்டுள்ளது. நடுவானில் விமானத்தை கடத்தல்காரர்களிடம் இருந்து காப்பதற்காக இந்த அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்காவில் இருந்து ஜெர்மனி சென்று கொண்டிருந்த யுனைடட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணி ஒருவரின் மோதிரத்தைக் காணவில்லை என விமான ஊழியர் குப்பைத் தொட்டியில் தேடியுள்ளார். அப்போது அங்கு சில துப்பாக்கித் தோட்டாக்கள் கிடப்பது கண்டுபிடிக்கப் பட்டது.
அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த ஊழியர் உடனடியாக இது தொடர்பாக விமானிக்கு தகவல் அளித்துள்ளார். ஆனால், அவர் அவை தன்னுடையது என்றும், அவற்றை கழிவறையில் போட்டு விடும்படியும் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் ஊடகங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சம்பந்தப்பட்ட பைலட்டின் பெயர் மற்றும் விபரங்களை வெளியிட யுனைடட் விமான நிறுவனம் மறுத்து விட்டது. ஆனால், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
விமானம் மியனிச் நகரில் தரையிறங்கியதும், பாதுகாப்பான இடத்தில் நிறுத்தப்பட்ட பின்னர் தோட்டாக்களைத் தேடி கண்டுபிடித்து அகற்றியுள்ளனர்.