விமானி அறையில் புகை: கிளம்பிய இடத்திற்கே அவசரமாக திரும்பிய யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம்
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் விமானி அறையில் புகை கிளம்பியதால் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் கிளம்பிய இடத்திற்கே திரும்பி வந்தது.
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து 150 பேருடன் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று ஹவாய் தீவில் உள்ள கோனா சர்வதேச விமான நிலையத்திற்கு கிளம்பியது. விமானம் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து கிளம்பி 3 மணிநேரம் ஆன பிறகு விமானி அறையில் புகை வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து விமானம் மீண்டும் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்திற்கே திரும்பி வந்தது. விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. முன்னதாக தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் வேறு விமானம் மூலம் ஹவாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் பயணிகள் பீதி அடைந்தனர்.
புகை மூண்ட விமானம் போயிங் 757 ரகத்தை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.