ஐ.நா. புதிய பொதுச் செயலாளராக அன்டோனியா கட்டரஸ் நியமனம்
நியூயார்க்: ஐ.நா சபையின் புதிய பொதுச்செயலாளராக போர்ச்சுகீசிய நாட்டின் முன்னாள் பிரதமர் அன்டோனியோ கட்டெரஸ் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டார்.
ஐக்கிய நாடுகள் அவையில் தற்போதைய பொதுச்செயலாளராக தென்கொரியாவைச் சேர்ந்த பான் கி மூன் பதவி வகித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக இந்த பொறுப்பு வகிக்கும் பான் கி மூனின் பதவி காலம் முடிவடைய உள்ளது. எனவே, ஐ.நா சபையின் அடுத்த பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் நடைபெற்று வந்தன.
அதன்படி அன்டோனியோ கட்டெரெஸை தேர்வு செய்ய அக்டோபர் 5-ம் தேதி பாதுகாப்பு கவுன்சில் முடிவு செய்தது. ஐ.நா., பொதுச் சபையின் 193 உறுப்பு நாடுகளும் கட்டரஸ் பதவி நியமனத்திற்கு ஆதரவு வழங்கினர். இதையடுத்து ஐ.நா.வின் புதிய பொதுச்செயலாளராக போர்ச்சுகலைச் சேர்ந்த அன்டோனியா கட்டரஸ் முறைப்படி இன்று அறிவிக்கப்பட்டார். இதற்கான அறிவிப்பை தற்போதைய பொதுச்செயலாளர் பான் கி மூன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
ஐக்கிய நாடுகள் அவையின் அகதிகள் முகமையின் தலைவராகப் பதவி வகிக்கும் கட்டரஸ், ஐ.நா. அவையின் 9ஆவது பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல், 2021-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை பதவி வகிப்பார். தற்போதைய பொதுச் செயலாளர் பான் கி மூன் டிசம்பர் 31ம் தேதியுடன் விடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.