சவுதிக்கு $1.29 பில்லியன் மதிப்புக்கு அதிநவீன ஆயுதங்களை சப்ளை செய்கிறது அமெரிக்கா
வாஷிங்டன்: சவுதி அரேபிய விமானப்படைக்கு 1.29 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள போர் ஆயுதங்களை சப்ளை செய்ய அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது.
அமெரிக்க காங்கிரஸ், இந்த டீலுக்கு கடந்த 30 நாட்களாக முட்டுக்கட்டை போட்டுவந்த நிலையிலும், இறுதியாக, டீல் ஓ.கே செய்யப்பட்டுள்தளு.
முதல்கட்டமாக 19 ஆயிரம் வெடிகுண்டுகள் கப்பல் மூலம், சவுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சவுதி அரேபியாவின் விமானப்படையில் ஆயுத பற்றாக்குறை நிலவுவதால், அவசரமாக ஆயுதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பாதுகாப்பு துறை வட்டார தகவல்கள் கூறுகின்றன.
சவுதி பல்வேறு வகைகளில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் எடுத்துவருவதால் அங்கு ஆயுத தட்டுப்பாடு உருவாகியுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் கூறுகின்றன.
எண்ணை வள நாடான சவுதி அரேபியா, அமெரிக்காவின் நீண்டகால ஆயுத வாடிக்கையாளராகும். எனவே இந்த டீல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒன்று கிடையாது என்கின்றது சவுதி வட்டாரம்.
ஆனால், இம்முறை ஆயுத கொள்முதல் சற்று சர்ச்சையை உருவாக்கிவிட்டது. ஏமெனில் தாக்குதல் நடத்தும் சவுதி, தீவிரவாதிகளைவிட அதிகமாக, பொதுமக்களை கொன்றுவிட்டதாக மனித உரிமை அமைப்புகள் கை நீட்டுகின்றன. ஐ.நா. அறிக்கைப்படி, சவுதி தலைமையிலான இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் நடத்திய தாக்குதலில், ஏமனில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
இம்முறை செயலாக்கம் கொள்ள உள்ள, சவுதியுடனான அமெரிக்க ஆயுத ஒப்பந்தத்தில், லேசர் உதவியோடு தாக்கும் 5,200 வெடிகுண்டுகள், GBU-10 மற்றும் GBU-12 வகை தளவாடங்கள், நவீனமான, GBU-24 வகை ஆயுதங்கள் மொத்தம் 1,100 உள்ளிட்டவை அடங்கும்.
வழக்கமான வகை தாக்குதலுக்காக 12 ஆயிரம் குண்டுகள் (500 முதல் 200 பவுண்டு எடைகொண்டவை), பதுங்கு குழிகளையும் தகர்க்கும் வகையிலான, 2000 பவுண்ட் எடைகொண்ட, BLU-109 penetrator வகை குண்டுகளும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.