ரஷ்யா கடனுதவியுடன் கூடங்குளத்தில் 5,6வது அணு உலைக்கு ரூ.50 ஆயிரம் கோடி முதலீடு
செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்: கூடங்குளத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 5 மற்றும் 6-வது அணு உலைகள் நிறுவும் பணிக்கு இந்தியா - ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அடுத்த 7 ஆண்டுகளில் இந்தப் பணிகள் முடியும் என கணிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று நடந்த இருதரப்பு ஆண்டு உச்சி மாநாட்டில் கலந்துகொண்டார். அப்போது கூடங்குளத்தில் 5 மற்றும் 6-வது அணு உலைகளை அமைப்பதற்கான ஒப்பந்தம், பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புதின் முன்னிலையில் கையெழுத்தானது.
இது குறித்து இந்திய அணுசக்தி கழகத்தின் நிர்வாக இயக்குநர் எஸ்.கே.சர்மா கூறுகையில், கூடங்குளத்தில் 5 மற்றும் 6வது உலைகள் ரூ.50 ஆயிரம் கோடியில் நிறுவப்பட உள்ளது. அதில், 5வது உலையில் 66 மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டு மின்உற்பத்தி செய்யப்படும். இதன் பிறகு 6 மாதத்தில், அடுத்த அணுஉலையில் மின்உற்பத்தி செய்யப்படும். இந்த திட்டத்திற்கு ரஷ்யா 70 சதவீதம் கடனாக வழங்குகிறது. மற்ற 30 சதவீதம் அணுசக்தி கழகத்தின் பணம் அல்லது அரசு வழங்கும். இவ்வாறு அவர் கூறினார். புதிய அணு உலைகளில் 4000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என கூறப்படுகிறது.