அமெரிக்கத் தமிழரை கார் ஏற்றி கொல்ல முயற்சி... ஹூஸ்டனில் இனவெறி தாக்குதல்!
ஹூஸ்டன் (யுஎஸ்): அமெரிக்காவின் பெட்ரோலிய தலைநகரான ஹுஸ்டனில் அமெரிக்கத் தமிழர் ஒருவர் மீது காரை ஏற்றி கொல்ல முயற்சி நடந்துள்ளது.
திங்கட்கிழமை அமெரிக்காவில் 'மெமோரியல் டே' என்று ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான தினம் கொண்டாடப்பட்டது. அதையொட்டி கடைகளில் கூடுதல் தள்ளுபடி உண்டு. விடுமுறை நாளும் என்பதால் ஷாப்பிங் மால்களில் கூட்டம் அலை மோதியது.
ஹூஸ்டன் புறநகர்ப் பகுதியான சைப்ரஸ் என்ற இடத்தில் உள்ள பீரிமியம் அவுட்லெட் மாலுக்கு அமெரிக்கத் தமிழர் முனீஸ்வரன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) குடும்பத்தினருடனும். நண்பர்கள் குடும்பத்தினருடனும் சென்றிருக்கிறார்.
கார் பார்க்கிங் பகுதியிலும் கூட்டம் காரணமாக இடம் கிடைக்கவில்லை. சுற்றிச் சுற்றிப் பார்த்து முனீஸ்வரனுக்கு முதலில் இடம் கிடைத்தது. காரை நிறுத்தி விட்டு வரும் போது இன்னொரு கார் வெளியே செல்வதைப் பார்த்திருக்கிறார். அந்த இடத்தில் பார்க் செய்ய நண்பரை அழைத்து இருக்கிறார்.
நண்பரும் வந்து இண்டிகேட்டர் போட்டு காத்திருக்கிறார். ஏற்கனவே இருந்த கார் சென்றதும் முனீஸ்வரன் கார் பார்க்கிங் இடத்தில் வந்து நின்றிருக்கிறார். அருகில் அவருடைய 5 வயது மகனும், சற்றுத் தள்ளி மனைவியும் மகளும் நின்றிருக்கிறார்கள்.
நண்பர் காருக்கு முன்னால் சிலர் குறுக்கே நடந்து சென்று கொண்டிருந்ததால், அவர்களுக்கு வழி விட்டுக்கொண்டு இருக்கிறார்.
அதற்குள் எதிர் திசையிலிருந்து ஒரு நபர் வந்து பார்க் செய்ய விரும்பி ஹாரனை அழுத்தியுள்ளார். அவருக்கு பதில் கூறும் விதமாக நண்பரும் ஹாரனை அழுத்தி தான் முன்னதாகவே காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
வந்த நபரோ, முனீஸ்வரனைப் பார்த்து, இந்தியனா என்று கேட்டிருக்கிறார். இவரும் ஆமாம் என்று சொல்லியிருக்கிறார்.
உடனடியாக காரை அதிவேகமாக எடுத்து முனீஸ்வரனை நோக்கி வந்துள்ளார். மத்தியில் நின்று கொண்டிருந்தவரை, காரின் வேகத்தைப் பார்த்த மனைவி சட்டென்று இழுத்துள்ளார். அதற்குள் கார் அவர் மீது மோதி கீழே தள்ளப்பட்டுள்ளார். உடன் நின்றிருந்த மகன் மீதும் கார் மோதியிருக்கிறது.
எழுந்து என்ன நடந்தது என்று யோசிப்பதற்குள், அந்த ஆசாமி காரை ரிவர்ஸில் சென்று மீண்டும் வேகமாக வந்துள்ளார். இவர் நகர்ந்து கொண்டதால் தப்பித்தார். காரை நிறுத்தி விட்டு மர்ம ஆசாமி வேகமாக சென்றிருக்கிறார். அவரை' ஹலோ' என்று அழைத்ததும் திரும்பியிருக்கிறார், முனீஸ்வரன் விரைவாக மர்ம ஆசாமியை புகைப்படம் எடுத்து விட்டார்
நல்ல வேளையாக தந்தைக்கும் மகனுக்கும் பெரிய காயம் ஏற்படவில்லை. வேறு அசம்பாவிதம் இன்றி தப்பித்துள்ளனர்.
அவசர உதவி (911)க்கு அழைத்து நடந்ததை கூறியிருக்கிறார். மர்ம ஆசாமியின் புகைப்படத்தையும் காட்டியுள்ளார். மர்ம ஆசாமியின் கார் ஒரு வாடகைக் கார் நிறுவனத்திற்குரியதாகும்.
போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முனீஸ்வரன் தனது நிறுவன மேலாளரிடம் கூற, அவர்கள், நிறுவன வழக்கறிஞர் மூலம் மேலதிக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஹூஸ்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கும் தகவல் சொல்லப்பட உள்ளது.
அதிபர் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, யுஎஸ்ஸில் இனவெறித் தாக்குதல் அதிகரித்து வருவது குறிப்பிடத் தக்கது. அக்கம் பக்கம் பார்த்து நடந்து கொண்டு பாதுகாப்பாக இருங்கள் என்று கூறுவதைத் தவிர வேறு சொல்வதற்கு ஏதுமில்லை.
-இர தினகர்