பூமியை நோக்கி விழுகிறது ரஷ்யாவின் ஆளில்லா விண்கலம்.. கடலில் விழுமா.. தலையில் விழுமா...?
மாஸ்கோ: சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சரக்குகளை ஏற்றிச் சென்ற ரஷ்யாவின் ஆளில்லா விண்கலம் திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைவதற்கு முன்பாகவே அது பூமியை நோக்கி விழ ஆரம்பித்துள்ளது.
இந்த விண்கலம் பூமியின் மீது எங்கு விழும் என்பது தெரியவில்லை. ஆனால் அதை கடலில் விழ வைக்கும் நடவடிக்கைகளில் ரஷ்யா இறங்கியுள்ளது.
இதுகுறித்து ஒரு விஞ்ஞானி கூறுகையில், அந்த விண்கல் பூமியை நோக்கி விழ ஆரம்பித்துள்ளது. அது எங்கு வேண்டுமானாலும் விழலாம் என்றார். மேலும் அவர் கூறுகையில், அந்த விண்கலம் முற்றிலும் கட்டுப்பாட்டை இழந்து விட்டது. அதனுடன் கட்டுப்பாட்டை ஏற்படுத்த ரஷ்யா முயன்று வருகிறது. இருப்பினும் அதற்கான சாத்தியக் கூறுகள் முற்றிலும் குறைவு என்றார்.
ரஷ்யாவின் சோயூஸ் ராக்கெட் மூலம் எம் 27 எம் என்று பெயரிடப்பட்ட அந்த விண்கலமானது பல்வேறு பொருட்களை எடுத்துக் கண்டு செவ்வாய்க்கிழமைதான் விண்ணுக்குக் கிளண்பியது. ஆனால் கிளம்பிய சில மணி நேரங்களிலேயே அது கட்டுப்பாட்டை இழந்தது. தற்போது அந்த விண்கலம் வேகமாக கீழே வந்து கொண்டிருப்பதாகவும், அதன் வேகத்தைக் குறைக்க முயற்சிகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.
தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் 6 சர்வதேச விண்வெளி வீரர்கள் தங்கியுள்ளனர். அவர்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டுதான் இந்த விண்கலம் கிளம்பியது. இது நாளை சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்திருக்க வேண்டும். ஆனால் அது தோல்வியில் முடிந்து விட்டது.
ஒரு காலத்தில் விண்வெளியியலில் கோலோச்சியது ரஷ்யா. விண்வெளிக்கு முதல் மனிதனை அனுப்பிய பெருமை ரஷ்யாவுக்கே உண்டு. அது 1961ம் ஆண்டு நடந்தது. அதன் பின்னர் நான்கு ஆண்டுகள் கழித்து உலகின் முதல் செயற்கைக் கோளான ஸ்புட்னிக்கை அது அனுப்பி சாதனை படைத்தது. ஆனால் சமீப காலமாக அது பல சறுக்கல்களைச் சந்தித்து வருகிறது.
பல செயற்கைக் கோள்களை அது இழந்துள்ளது. 2011ம் ஆண்டு இதேபோல சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பிய ஒரு விண்கலம் தோல்வியில் முடிந்தது. அது சைபீரியாவில் போய் விழுந்து சாம்பலானது.
தற்போதைய நிலவரம் குறித்து தற்போது சீனாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் ரஷ்ய துணை பிரதமர் டிமிட்ரி ரோகோஸின் கூறுகையில், இது கவலை தருவதாக உள்ளது. அனைவரும் நிலைமையை உன்னிப்பா கவனித்து வருகிறோம் என்றார்.
நாசா இதுகுறித்து கருத்துத் தெரிவிக்கையில், ரஷ்ய விண்கலம் எடுத்துச் சென்ற பொருட்களில் அமெரிக்காவுக்குத் தேவையான ஒரு முக்கிய உபகரணம் உள்ளது. இருப்பினும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களுக்குத் தேவையான பொருட்கள் உள்ளன. அதை வைத்து அடுத்த பல மாதங்களுக்குச் சமாளிக்க முடியும் என்று நாசா கூறியுள்ளது.
தற்போது கீழே விழுந்து கொண்டிருக்கும் விண்கலத்தில் 110 பவுண்டு ஆக்சிஜன், 926 பவுண்டு தண்ணீர், 3128 பவுண்டு உதிரி பாகங்கள், 880 கிலோ எரிபொருள் ஆகியவை உள்ளனவாம்.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அடுத்து ஜூன் 19ம் தேதிதான் பொருட்கள் எடுத்துச் செல்லப்படவுள்ளன. அதை தனியார் அமைப்பான அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் எடுத்துச் செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.