தெற்கு சூடான் தாக்குதல்: இந்திய வீரர்களின் துணிச்சலே அதிக உயிரிழப்பைத் தடுத்தது: ஐ.நா பாராட்டு
ஜூபா: இந்திய வீரர்களின் துணிச்சல் மிக்க செயல்களாலேயே தெற்கு சூடான் அமைதிப்படை முகாம் தாக்குதலின் போது அதிக உயிர் இழப்பு தவிர்க்கப்பட்டது என ஐ.நா.சபை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தெற்கு சூடான் தலைநகரில் கடந்த ஞாயிறன்று இரவு திடீரென கலகம் ஏற்பட்டது. முன்னாள் துணை அதிபர் ரிக் மச்சரின் ஆதரவு ராணுவ வீரர்கள் நாடு முழுவதும் கலவரத்தில் ஈடுபட்டனர்.
அதிபர் சால்வா கீருக்கு எதிராக நடந்த இந்த கலகம் 2 நாட்களில் முறியடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ராணுவப் புரட்சியின் போது 400 முதல் 500 பேர் வரை பலியாகி இருப்பதாக ஐ.நா. அறிவித்துள்ளது.
புரட்சியில் ஈடுபட்டதாக முன்னாள் நிதி அமைச்சர் கோஸ்டி மானிப், முன்னாள் நீதித்துறை அமைச்சர் ஜான் லக் ஜோக், முன்னாள் உள்துறை அமைச்சர் ஜியர் சங் அலங் உள்பட 10 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைநகர் ஜுபாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ராணுவ புரட்சியின் விளைவாக சுமார் 20 ஆயிரம் பேர் ஜுபாவில் உள்ள ஐ.நா.வளாகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். முன்னாள் துணை அதிபர் ரிக் மச்சரின் ஆதரவு கலகக்காரர்கள் தலைநகர் ஜுபாவிலிருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள ஜாங்லீ மாநிலத்தின் தலைநகரான போர் நகரத்தை கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில், தெற்கு சூடானில் உள்ள ஜொங்கோலி மாநிலத்தின் அபோக்கோ நகரில் ஐ.நா. அலுவலகத்தின் மீது சுமார் 2 ஆயிரம் நுவர் இன தீவிரவாதிகள் சில தினங்களுக்கு முன்னர் அதிரடி தாக்குதல் நடத்தினர். பயங்கர ஆயுதங்களுடன் ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட்ட அவர்கள், உள்ளே இருந்த சர்வதேச அமைதிப்படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சரமாரியாக சுட்டனர்.
இத்தாக்குதல் நடந்தபோது இந்தியாவை சேர்ந்த 43 அமைதிப்படையினர் அலுவலகத்தின் உள்ளே இருந்தனர். ஜுபாவில் உள்ள ஐ.நா. வளாகத்தில் சுமார் 20 ஆயிரம் பேர் தஞ்சம் அடைந்துள்ளது போல் போக்கோ நகரின் ஐ.நா. அலுவலகத்திலும் தீவிரவாதிகளுக்கு பயந்து சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களை கொல்லும் நோக்கத்தில் தீவிரவாதிகள் இன்று நடத்திய ஆவேச தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த 2 அமைதிப்படையினர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிர் தியாகம் செய்த 2 இந்தியர்கள் வாரண்டு அதிகாரிகள் தர்மேஷ் சங்வான், குமார் பால் சிங் ஆவார்கள். காயம் அடைந்தவரின் பெயர் மோன்தால் ஷாபுல். இவரது மார்பில் குண்டு பாய்ந்துள்ளது. தற்போது அவர் மலாகால் என்ற இடத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அவருடைய உடல்நிலை சீராக இருக்கிறது.
இந்நிலையில், நேற்று முந்தினம் உயிர் இழந்த 2 பேரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் இரங்கல் கூட்டம் தலைநகர் ஜூபாவில் உள்ள ஐ.நா.சபை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஐ.நா. பொதுச்செயலாளரின் சிறப்பு பிரதிநிதி (தெற்கு சூடான்) ல்டே ஜான்சன் கலந்து கொண்டு 2 பேரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அப்போது அவர், ‘இந்த அமைதிப்படை முகாமில் பணியில் இருந்த 43 இந்தியர்களும் துணிச்சலுடன் செயல்பட்டார்கள். இதனாலேயே பெரிய உயிர் இழப்பு தவிர்க்கப்பட்டது. இந்திய ராணுவத்தின் இந்த அர்ப்பணிப்பு மிகுந்த பாராட்டுக்குரியது' எனப் பாராட்டினார்.
மேலும், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தெற்கு சூடானில் எங்கள் பணி தொடரும். அதற்கு அச்சுறுதல்கள் வந்தால் அதை சந்திக்க தயாராக இருக்கிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற தெற்கு சூடான் வெளியுறவு மந்திரி பர்னபா மரில் பெஞ்சமின் பேசுகையில், ‘இந்த தாக்குதலை நடத்தியவர்களை பிடித்து நீதியின் முன் நிறுத்துவோம்' என்றார்.
இதற்கிடையில் அமெரிக்க போர் விமானங்கள் மீது புரட்சியாளர்கள் சுட்டதில் 4 வீரர்கள் காயம் அடைந்தனர். அங்கு வசிக்கும் அமெரிக்கர்களை மீட்க சென்ற போது இந்த சம்பவம் நடைபெற்றது.
இந்த விவகாரம் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸ் மற்றும் அதிகாரிகளுடன் ஜனாதிபதி ஒபாமா அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும், தெற்கு சூடானில் இருக்கும் அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு தலைவர்கள் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.