இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களை விசாரிக்க 3 பேர் குழு... ஐநா அமைத்தது!
இலங்கையில் இறுதிப் போரின்போது நடந்த மனித உரிமை மீறல் பற்றி விசாரிக்க 3 பேர் கொண்ட ஐ.நா. விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் 30 ஆண்டுகளுக்கும் மேல் உள்நாட்டுப் போர் நடந்தது.
போர் குற்றங்கள்
இந்த போர் கடந்த 2009-ம் ஆண்டு, மே மாதம் 18-ந் தேதி முடிவுக்கு வந்தது. போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, உலகில் வேறு எங்கும் நடந்திராத அளவுக்கு மனித உரிமை மீறல்கள் நடைபெற்றன.
சிங்கள ராணுவம் போர் குற்றங்களை அரங்கேற்றியது. போர் இல்லாத பகுதிகளிலும் அப்பாவி தமிழ் மக்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்தது. இப்படி 70 ஆயிரம் அப்பாவி தமிழ் மக்கள் இறுதிப் போரின்போது மட்டும் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாயின.
இலங்கையில் தமிழருக்கு எதிராக நடந்த இனப்படுகொலை தொடர்பான வீடியோ காட்சிகளை அவ்வப்போது இங்கிலாந்து நாட்டின் ‘சேனல்-4' தொலைக்காட்சி ஒளிபரப்பியது. உலகின் வேறு எந்தப் பகுதியிலும் நடந்திராத இந்த கொடூர காட்சிகள், சர்வதேச சமூகத்தை உலுக்கின.
சர்வதேச போர்க்குற்ற விசாரணை
அதைத் தொடர்ந்து இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள், போர் குற்றங்கள் தொடர்பாக நம்பகமான, சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற கருத்து ஓங்கி ஒலிக்கத் தொடங்கியது. இலங்கை போர் குற்றங்கள் தொடர்பாக அந்த நாட்டுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தில் தொடர்ந்து 3 ஆண்டுகள் தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டன.
நவி பிள்ளை
கடைசியாக கடந்த மார்ச் மாதமும் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுமட்டுமின்றி, இலங்கைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி, அங்கு நடந்த மனித உரிமை மீறல்கள், போர் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவி பிள்ளை அளித்த அறிக்கையும் ஏற்கப்பட்டது. இதையடுத்து சர்வதேச விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இலங்கை நிராகரிப்பு
ஆனால் சர்வதேச விசாரணையை இலங்கை ஏற்க மறுத்துவிட்டது. ‘இது இலங்கையின் இறையாண்மை மீதான தாக்குதல்' என கூறி, சர்வதேச விசாரணையை இலங்கை அதிபர் ராஜபக்சே நிராகரித்தார்.
விசாரணை குழு
இந்த நிலையில் 3 வல்லுனர்களைக் கொண்ட விசாரணை குழுவை ஐ.நா. சபை நேற்று அமைத்தது.
அவர்கள், பின்லாந்து நாட்டின் முன்னாள் அதிபரும், நோபல் பரிசு பெற்றவருமான மார்ட்டி ஆட்டிசாரி (வயது 77), நியூசிலாந்து நாட்டின் முன்னாள் கவர்னர் ஜெனரல் சில்வியா கார்ட்ரைட் (70), பாகிஸ்தானின் முன்னாள் மனித உரிமை கமிஷன் தலைவர் ஆஸ்மா ஜஹாங்கீர் (62).
10 மாதம் விசாரணை
இவர்கள் இலங்கைக்குச் சென்று இலங்கையில் உள்நாட்டு போரின் இறுதிக் கட்டத்தில் அரங்கேற்றப்பட்ட மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணை குழுவினர், புலன் விசாரணை அதிகாரிகள், தடயவியல் நிபுணர்கள், பாலின வல்லுனர், சட்ட பகுப்பாய்வாளர், சிறப்பு வாய்ந்த பிற ஊழியர்கள் ஆகியோருடன் இணைந்து செயல்படுவார்கள். இவர்களின் விசாரணை உடனடியாக தொடங்கி 10 மாதங்கள் நடைபெறும். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாத மத்தியில் முடியும்.
நவி பிள்ளை வரவேற்பு
இந்த விசாரணை குழு அமைக்கப்பட்டிருப்பதை ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் நவி பிள்ளை வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று கருத்து தெரிவிக்கையில், "இந்த முக்கியமான, சவாலான விசாரணையில் உதவுவதற்கு 3 சிறப்பு மிக்க வல்லுனர்கள் சம்மதம் தெரிவித்திருப்பது எனக்கு பெருமிதம் அளிக்கிறது. அவர்கள் ஒவ்வொருவரும் இந்த விசாரணையை நடத்துவதற்கு ஏற்ற மிகுந்த அனுபவம் மிக்கவர்கள். நிபுணத்துவம் மிக்கவர்கள். அதுமட்டுமல்ல, நேர்மையானவர்கள், சுதந்திரமானவர்கள், பாரபட்சமற்றவர்கள்" என கூறியுள்ளார்.
ஒத்துழைப்பு இல்லாவிட்டாலும்...
மேலும், "இந்த விசாரணை குழுவுக்கு ஒத்துழைப்பு அளிக்க முடியாது என்று இலங்கை கூறி வருகிறது. இந்த விசாரணைக்கு இலங்கை அரசும், மக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். இது உண்மையை வெளிக்கொண்டு வர உதவும். பொறுப்பினை ஏற்றுக்கொள்ளச் செய்யும். சமரசத்துக்கும் வழிநடத்தும். இலங்கை அரசின் ஒத்துழைப்பு இல்லாவிட்டாலும்கூட, விசாரணை தடையின்றி நடக்கும்," என்றார்.