புரட்சிப் படையினரிடம் சிக்கி உயிரிழந்த கடாபி.. திகிலடிக்க வைக்கும் கடைசி நிமிட கோரக் காட்சிகள்!
திரிபோலி: லிபியாவில் ஏற்பட்ட புரட்சியின்போது லிபிய சர்வாதிகாரி கர்னல் கடாபி, புரட்சிப் படையினரிடம் சிக்கி உயிரிழப்பதற்கு முன்பு சந்தித்த சித்திரவதைகள், அடி உதை உள்ளிட்ட கோரக் காட்சிகள் அடங்கிய புதிய வீடியோ வெளியாகியுள்ளது.
அதில் பார்க்கவே மிகப் பரிதாபமாக காட்சி தருகிறார் கடாபி. உயிர்ப் பிச்சை கேட்டு அவர் கெஞ்சும் காட்சி அதிர்ச்சிகரமாக இருக்கிறது.
அவரது தலையில் ஒருவர் பிஸ்டலை வைத்து சுடப் போவது போல இருக்கும் காட்சியும் இதில் இடம் பெற்றுள்ளது. உயிரோடு அவரைப் பிடித்து தெருத் தெருவாக புரட்சிப் படையினர் இழுத்துச் சென்ற வீடியோ காட்சி இது.
2011ல் கொல்லப்பட்ட கடாபி
லிபியாவின் சர்வாதிகாரியாக கோலோச்சி வந்த கடாபியின் சாம்ராஜ்ஜியம் 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் வீழ்ந்து சரிந்தது. திரிபோலி நகரில் வைத்து கடாபியை உயிரோடு பிடித்தனர் புரட்சிப் படையினர்.
அடித்து உதைத்து வெளுத்தனர்
உயிருடன் சிக்கிய கடாபியை புரட்சிப் படையினர் சரமாரியாக அடித்து உதைத்து சித்திரவதை செய்தனர். இதில் நிலை குலைந்து போனார் கடாபி.
தெருத் தெருவாக ஊர்வலம்
பின்னர் கடாபியை டிரக் ஒன்றில் ஏற்றி தெருத் தெருவாக ஊர்வலமாக கொண்டு சென்றனர். அதன் பின்னர் அவரை சுட்டுக் கொன்று விட்டனர்.
அய்மான் அல்மானி எடுத்த வீடியோ
கடாபி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டபோது அதை அய்மான் அல்மானி என்ற புரட்சிப் படை வீரர் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்தார்.
முழு வீடியோ வெளியானது
கடாபி பிடிக்கப்பட்ட சமயத்தில் முழுமையான வீடியோ கிடைக்கவில்லை. இந்த நிலையில் பிபிசி செய்தியாளர் காப்ரியல் கேட்ஹவுஸ் என்பவர் அல்மானியைத் தேடிக் கண்டுபிடித்து முழு வீடியோவையும் பெற்று வெளியிட்டுள்ளார்.
ரத்தம் கொட்டக் கொட்ட
ரத்தம் சொட்டச் சொட்ட பரிதாபகரமான நிலையில் இந்த வீடியோவில் காணப்படுகிறார் கடாபி. உயிருக்குக் கெஞ்சுகிறார். இவருக்கு இந்த தண்டனை பொருத்தமானதே என்று கூறுகிறார் அல்மானி.
கடாபியின் தங்கத் துப்பாக்கி
கடாபி எப்போதுமே ஒரு தங்கக் கவசத்தால் ஆன துப்பாக்கியை வைத்திருப்பார். அது என்ன ஆனது என்று தெரியாமல் இருந்தது. தற்போது அது புரட்சிப் படையைச் சேர்ந்த 17 வயதான முகம்மது எல்பிதி என்பவர் அப்போது கைப்பற்றி வைத்திருந்தார் என்பது தெரிய வந்துள்ளது. அதையும் காப்ரியேல் உறுதிப்படுத்தியுள்ளார்.
தங்கத் துப்பாக்கி
இதுகுறித்து எல்பிதி கூறுகையில், கடாபியை அடித்துக் கொன்றதில் எனக்குத் தொடர்பு இல்லை. அவரது கைத்துப்பாக்கி கீழே கிடந்தது. அதை நான் எடுத்துக் கொண்டேன் என்றார்.
நான் கொல்லவில்லை
முன்னதாக இவர்தான் கடாபியை சுட்டுக் கொன்றதாகவும் கூறப்பட்டது. இதனால் கடாபி ஆதரவாளர்களின் தொடர் மிரட்டலுக்குள்ளாகியும் வந்தார். ஆனால் தான் கடாபியைக் கொல்லவில்லை என்று எல்பிதி கூறியுள்ளார்.