தெற்கு சூடானில் ராணுவப் புரட்சி முறியடிப்பு: 500 பேர் பலி
ஜூபா: தெற்குசூடானில் அதிபருக்கு எதிரான ராணுவப் புரட்சி முறியடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த புரட்சியின் போது 500 பேர்வரை கொல்லப்பட்டதாக ஐக்கியநாடுகள் சபை அறிவித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடான் தலைநகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென ராணுவ புரட்சி ஏற்பட்டது. முன்னாள் துணை அதிபர் ரியக் மானசரின் ஆதரவு ராணுவ வீரர்கள் இதில் ஈடுபட்டனர். ராணுவ புரட்சியின் போது சுமார் 20 ஆயிரம் பேர் ஜுபாவில் உள்ள ஐ.நா.வளாகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
அதிபர் சால்வா கீருக்கு எதிராக நடந்த இந்த புரட்சி 2 நாட்களில் முறியடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. புரட்சியில் ஈடுபட்டதாக முன்னாள் நிதி அமைச்சர் கோஸ்டி மானிப், முன்னாள் நீதித்துறை மந்திரி ஜான் லக் ஜோக், முன்னாள் உள்துறை அமைச்சர் ஜியர் சங் அலங் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைநகர் ஜுயாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் ராணுவ புரட்சியின் போது 400 முதல் 500 பேர் வரை பலியாகி இருப்பதாக ஐ.நா.சபை தெரிவித்துள்ளது.
ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள 54 வது நாடான தெற்கு சூடான் கடந்த 2011ம் ஆண்டு ஜூலை 9ம் தேதி தனி நாடாக உதயமானது. எண்ணெய் வளம் உள்ள நாடாக இருந்தாலும் வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கின்றனர் தெற்கு சூடான் நாட்டு மக்கள். இதனிடையே அதிபருக்கு எதிரான புரட்சிகள் வேறு மக்களை அச்சத்திற்குள்ளாக்கி வருகிறது.