"நான் கால்பந்து போல் ஆகிவிட்டேன்" இரண்டு அணிகளும் உதைக்கின்றன.. சொல்வது விஜய் மல்லையா !
தேசிய ஜனநாயக கூட்டணியும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் தன்னை கால்பந்து போல் வைத்து விளையாடுகின்றன என்று விஜய் மல்லையா கூறியுள்ளார்.
லண்டன்: தான் கால்பந்து போன்றவன் என்றும், கடுமையான போட்டி கொண்ட இரண்டு அணிகள் சுற்றி சுற்றி பந்தை உதைப்பதை போல் தன்னை உதைப்பதாகவும் விஜய் மல்லையா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கிங்ஃபிஷர் நிறுவனத்தின் உரிமையாளரான, தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து ரூ.9,000 கோடிக்கு மேல் கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்தவில்லை.
வங்கிகள் நெருக்கடி கொடுத்த நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டின் மார்ச் மாதம் இங்கிலாந்து சென்றுவிட்டர். அவரை எப்படியாவது இந்தியாவிற்கு கொண்டு வந்து விட வேண்டும் என்று முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆனால் அவரோ வெளிநாட்டில் இருந்தபடி தன் மீதான வழக்கு விவரங்களை கவனித்து வருகிறார். அவ்வப்போது தனது கருத்துக்களையும் வெளியிட்டு வருகிறார் மல்லையா. இந்தநிலையில் மல்லையா தற்போது வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தான் கால்பந்து போன்றவன் என்றும், கடுமையான போட்டி கொண்ட இரண்டு அணிகள் சுற்றி சுற்றி உதைப்பதாகவும் கூறியுள்ளார்.
சி.பி.ஐ. விசாரணை மற்றும் அவரை பிரிட்டனில் இருந்து இந்தியா கொண்டு வருவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள மல்லையா, எனக்கு எதிராக ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நான் ஒரு கால்பந்து. தேசிய ஜனநாயக கூட்டணியும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் என்னை வைத்து விளையாடுகின்றன. துரதிர்ஷ்டவசமாக இந்த விளையாட்டில் நடுவர்கள் இல்லை என்றும் மல்லையா குறிப்பிட்டுள்ளார்.