10,000 சிரியா அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க அமெரிக்கா திட்டம்
நியூயார்க்: உள்நாட்டுப் போர் நடைபெறும் சிரியாவில் இருந்து வெளியேறுவோரில் ஆண்டுக்கு 10 ஆயிரம் பேரை அகதிகளாக ஏற்க அமெரிக்கா ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்காவின் அகதிகளுக்காக இணை அமைச்சர் ஆனி ரிச்சர்டு கூறியுள்ளதாவது:
அமெரிக்காவில் இந்த ஆண்டு 350 சிரியா அகதிகளுக்குத்தான் அனுமதி கொடுக்கப்பட்டிருந்தது. வரும் ஆண்டில் இருந்து 10 ஆயிரம் அகதிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.
2013ஆம் ஆண்டில் இருந்து சிரியா அகதிகள் 30 ஆயிரம் பேருக்கு ஜெர்மன் அனுமதி அளித்துள்ளது. அமெரிக்காவில் குடியேற விரும்பும் சிரியா அகதிகளிடம் ஜோர்டானின் அம்மான் மற்றும் துருக்கியின் இஸ்தான்புல்லில் உரிய விசாரணை நடத்தப்படும். லெபனானின் பெயரூட்டில் இத்தகைய ஏற்பாட்டை செய்வதில் பாதுகாப்பு சிக்கல் இருக்கிறது.
அதே நேரத்தில் வடக்கு ஈராக்கில் குரிதிஷ் பிராந்தியத்தில் இதுபோல் அமெரிக்காவில் குடியேற விரும்பும் அகதிகளிடம் விசாரணை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அகதிகளில் பெரும்பாலோனோர் கணவரை இழந்து குழந்தைகளுடன் இருப்பவர்கள், முதியோர் மற்றும் மருத்துவ வசதியை நாடுவோர்தான் அதிகம். இவர்கள் யாரும் பயங்கரவாதிகள் அல்ல.. இவர்களால் அமெரிக்காவுக்கு எந்த ஒரு தீங்கும் வந்துவிடாது.
டெட்ராய்ட் சான் டியாகோ புறநகர்களில் அரேபிய அமெரிக்கர்கள் அதிகம் இருக்கின்றனர். ஆனால் சிரியா அகதிகளை அமெரிக்காவின் பல பகுதிகளிலும் குடியேற்றம் செய்து வருகிறோம். வடக்கு கரோலினாவில் 33 சிரியா அகதிகள் குடியேற்றப்பட்டுள்ளனர். டெக்ஸாசில் 30, கலிபோர்னியா, இல்லினாய்சில் 24 பேரும் மிக்சிகனில் 5 பேரும் குடியேற்றப்பட்டுள்ளனர். இதற்கான சிறப்பு அலுவலகங்கள் அமைக்கப்பட்டும் உள்ளன.
தென் சூடான், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, உக்ரைன், காஸா என பல பகுதிகளில் இருந்தும் அகதிகள் குடியேறுகின்றனர். அதேபோல் திடீரென தாக்கி அழித்து வரும் எபோலா நோயிடம் இருந்தும் ஐ.எஸ்.ஐ.எஸ்> தீவிரவாதிகளிடம் இருந்தும் தப்பித்தும் அகதிகளாக வருகின்றனர். இதனால் இந்த ஆண்டு மிகக் கடுமையான நெருக்கடியான ஆண்டாகவே இருந்தது. இருப்பினும் லட்சக்கணக்கானோரை பசியிலும் நோயிலும் இருந்து காப்பாற்றியிருக்கிறோம்.
ஐ.நா. அகதிகள் ஆணையமானது ஆண்டுக்கு 70 ஆயிரம் பேர் அகதிகளாக செல்கின்றனர் என்கிறது. இவர்களில் 20 ஆயிரம் ஈராக்கியர்கள், 16 ஆயிரம் பேர் பர்மியர்கள். பூட்டான் மற்றும் சோமாலியர்களும் இதில் அடக்கம்.
இவ்வாறு அவர் கூறினார்.