தெ. கொரியாவுக்கான அமெரிக்க தூதருக்கு பிளேடு வெட்டு.... கொரியாக்களை இணைக்கக் கோரி முதியவர் தாக்குதல்!
சியோல்: தென் கொரியாவின் சியோல் நகரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்க தூதர் மார்க் லிப்பெர்ட் மீது ஒரு நபர் பிளேடால் தாக்கியதில், மார்க்கின் முகம், மணிக்கட்டு ஆகிய இடங்களில் வெட்டு வி்ழுந்து ரத்தம் கொட்டியது.
பிரிந்து கிடக்கும் வடக்கு மற்றும் தென் கொரிய நாடுகளை இணைக்க வேண்டும் என்று கோஷமிட்டபடி இந்த தாக்குதலை அந்த நபர் ஈடுபட்டார். வெட்டுக் காயம் அடைந்த அமெரிக்க தூதர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
வெட்டு விழுந்ததில் அமெரிக்க தூதரின் முகத்திலிருந்தும், மணிக்கட்டிலிருந்தும் ரத்தம் கொட்டத் தொடங்கியது. உடனடியாக அவரது மணிக்கட்டில் துணியைச் சுற்றி ரத்தப் போக்கை குறைத்தனர். விரைவாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த தாக்குதலுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சியோலில் உள்ள ஒரு கலை மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் மார்க் லிப்பர்ட் கலந்து கொண்டிருந்தார். கொரிய அமைதி குறித்துப் பேச அவர் தயாராகிக் கொண்டிருந்தபோதுதான் இந்தத் தாக்குதல் நடந்து விட்டது
லிப்பர்ட்டுக்கு பெரிய அபாயம் எதுவும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு சிறிய அறுவைச் சிகிச்சை நடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்திய நபரின் பெயர் கிம் கி ஜோங் என்று தெரிய வந்துள்ளது. அவருக்கு வயது 55 ஆகும். இவர் ஏற்கனவே ஒருமுறை தாக்குதல் நடத்திக் கைதானவர் ஆவார். 2010ம் ஆண்டு சியோலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ஜப்பான் தூதர் மீது செங்கல்லை வீசி பரபரப்பை ஏற்படுத்தியவர் இந்த ஜோங். இவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது நிறுத்தி வைக்கப்பட்டது. அந்தத் தாக்குதலில் தூதருக்கு அடிபடவில்லை. மாறாக அவருக்கு அருகில் இருந்த அவரது உதவியாளர் காயமடைந்தார்.
அதற்கு முன்பு 2007ம் ஆண்டு தன்னைத் தானை தீயில் எரித்து உயிரை மாய்க்கும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர் இவர்.