அமெரிக்கா-சீனா மோதல் உச்சகட்டம்.. ட்ரம்ப்-ஜி ஜின்பிங் பங்கேற்கவிருந்த ஜி20 மீட்டிங் திடீர் ரத்து
பீஜிங்: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, சீனாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஏற்பட்ட கடுமையான மோதல் காரணமாக வெள்ளிக்கிழமை, ஜி20 தலைவர்களுக்கிடையில் திட்டமிடப்பட்ட வீடியோ கான்பரன்ஸ் கடைசி நிமிடத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
Recommended Video
இந்த செய்தியை, சவுத் சீனா மார்னிங் போஸ்ட் என்ற ஊடகம் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ கான்பரன்சில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்டோர் பங்கேற்பதாக இருந்தது.
190,000 க்கும் அதிகமான மக்களைக் கொன்றுள்ளது கொரோனா வைரஸ். சீனாவுடன் சேர்ந்து மெத்தனமாக உலக சுகாதார அமைப்பு (WHO) இருந்ததாகவும், அதுதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
ஜி20 மாநாடு
ஆனால், கொரோனா பரவல் தொடர்பாக, உலக சுகாதார அமைப்பை விசாரிப்பதற்கான அமெரிக்காவின் கோரிக்கையை, சீனா ஏற்க மறுக்கிறது. இந்த பதற்றங்களுக்கு இடையே வீடியோ கான்பரன்ஸ் கடைசி நிமிடத்தில் நிறுத்தப்பட்டது. WHO விஷயத்தில் சமரசம் செய்ய இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டால், குறைந்தபட்சம் வரும் நாட்களிலாவது, ஜி20 உச்சிமாநாடு நடக்கக்கூடும், என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சவுதி வெளியிடவில்லை
வீடியோ கான்பரன்ஸ் தொடர்பான நிகழ்ச்சி நிரலை, ஜி20 உறுப்பு நாடான, சவுதி அரேபியா வெளியிட வேண்டியிருந்தது. ஆனால், வெளியிடவில்லை. இதையடுத்து ஊடகங்கள் விசாரித்தபோதுதான், இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. வீடியோ கான்பரன்ஸ் ரத்தானது பற்றி கருத்து கேட்டு சீன ஊடகம் அனுப்பிய மின்னஞ்சலுக்கு ஜி 20 ஏற்பாட்டுக் குழு உடனடியாக பதிலளிக்கவில்லை என்று அந்த ஊடகச் செய்தி குறிப்பிடுகிறது.
இரு தரப்பு மோதல்
"கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதில் திறமையை காட்ட தவறியுள்ளது அமெரிக்க தலைமை. அதற்கு பதில் சீனாவைக் குறை கூற முயற்சிக்கிறது. அதன் ஒரு பகுதியாக, உலக சுகாதார அமைப்பிற்கான நிதியுதவியை நிறுத்த அமெரிக்கா உத்தரவிட்டதாக சீனா கருதுகிறது. ஆனால் அமெரிக்கா WHO சீனாவின் கையாள் என்றும், பெரும் இழப்புகளுக்கு சீனா பொறுப்பேற்க வேண்டும் என்றும் கருதுகிறது" என்கிறார், ஷாங்காயில் உள்ள ஃபுடான் பல்கலைக்கழகத்தின் சர்வதேச உறவுகள் பேராசிரியர் ஷென் டிங்லி.
முதல் ஆலோசனை
"சீனா-அமெரிக்க உறவுகள் கடுமையாக மோசமடைந்துள்ளன, அது மிகவும் கவலை அளிக்கிறது, எதிர்காலம் இன்னும் மோசமாகிவிடும்." என்றும் அவர் கூறியுள்ளார். ஜி20 நாட்டு தலைவர்களின் முதல் வீடியோ கான்பரன்ஸ் மார்ச் 26 அன்று நடைபெற்றது, "தொற்றுநோயைக் கட்டுப்படுத்த எதை வேண்டுமானாலும் செய்ய வேண்டும்" என்று தலைவர்கள் அப்போது ஒப்புக் கொண்டனர். உலகப் பொருளாதாரத்திற்கு உதவ 5 டிரில்லியன் டாலர் பேக்கேஜை உருவாக்கவும் ஒப்புக்கொண்டனர். ஆனால், இப்போது அவர்களுக்குள்ளேயே மோதல் உருவாகியுள்ளது.
சுற்றுலா
அதேநேரம், கொரோனா வைரஸ் தொற்று மற்றும் சுற்றுலா குறித்து விவாதிக்க ஜி20 நாடுகளின் சுற்றுலா அமைச்சர்கள் கூட்டத்தை வீடியோ கான்பரன்ஸ் மூலம் சவுதி நேற்று நடத்தியது. சவுதி சுற்றுலாத்துறை அமைச்சர் அகமது அல்-கதீப் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், உலக நெருக்கடியால், சுற்றுலாவுக்கு ஏற்படும் ஏற்றத்தாழ்வு மற்றும் தாக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது.