19 ஆண்டு கால உள்நாட்டுப் போர் ஓய்கிறது.. அமெரிக்கா - தலிபான் இன்று ஒப்பந்தம்.. இந்தியா முன்னிலையில்!
தோஹா: ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையே போர் நிலவி வந்த நிலையில் அமெரிக்கா- தலிபான்கள் இடையே இன்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 19 ஆண்டுகளாக அந்த நாட்டு அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் தொடங்கியதை அடுத்து அங்கு அமெரிக்க படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து கொண்டே செல்லும் இந்த போரை முடிவுக் கொண்டு வர ஆப்கானிஸ்தான் அரசின் உதவியுடன் அமெரிக்க தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன் முடிவில் அமைதி ஒப்பந்தத்திற்கு தலிபான்கள் ஒப்புக் கொண்டனர். இதை அமெரிக்க ஏற்க தயாராக இருந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்களில் அமெரிக்க வீரர்கள் பலியாகிவிட்டனர்.
இதனால் டொனால்ட் டிரம்ப் கோபமடைந்து தலிபான்களுடனான அமைதி பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக கடந்த ஆண்டு அறிவித்தார். இதையடுத்து இரு தரப்புக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சென்று பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்கவிருப்பதாக அறிவித்தார்.
அதன்படி கத்தார் தலைநகர் தோஹாவில் அமெரிக்காவுக்கும் தலிபானுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில் பேச்சுவார்த்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்கா- தலிபான்களுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது. இதில் முதல் முறையாக இந்தியா கலந்து கொள்கிறது. கத்தார் அரசு அழைப்பு விடுத்ததை அடுத்து கத்தாருக்கான இந்திய தூதர் கலந்து கொள்கிறார். அது போல் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் திரும்ப பெறப்படும் என்பது குறித்தும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்படும்.