இந்தியாவை சீண்டுகிறதா? பாகிஸ்தானுக்கு எப் 16 போர் விமானங்களை வாரி வழங்கும் அமெரிக்கா
இஸ்லாமாபாத்: இந்தியா மீது பாகிஸ்தான் எப் 16 விமானம் குண்டு வீசி தாக்கிய வடு மறைவதற்குள், ரூ.863 கோடி மதிப்பில் பாகிஸ்தானுக்கு மீண்டும் எப் 16 ரக விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்கா முன் வந்துள்ளது.
காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி 50 பேரை தீவிரவாதிகள் கொன்றனர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் பாலகோட் பகுதிக்குள் புகுந்து இந்திய போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கி தீவிரவாத முகாம்களை அழித்தன. அதை தொடர்ந்து இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் எப்- 16 ரக போர் விமானங்கள் மூலம் குண்டு வீசியது.
இந்த போர் விமானங்கள் அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் வாங்கியுள்ளது. இதை தீவிரவாதிகளை ஒடுக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் வழங்கி இருந்தது. அதை மீறி இந்தியா மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சமீபத்தில் அமெரிக்கா சென்று அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்தார். அப்போது இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது எப்-16 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு ரூ.863 கோடிக்கு அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் விற்பனை செய்ய அனுமதி தரப்பட்டுள்ளது.
125 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் எப் -16 விமானங்களை அளிப்பதோடு தொழில்நுட்ப பாதுகாப்பு குழு (டிஎஸ்டி)க்காக பாகிஸ்தானுக்கு சாத்தியமான ஒத்துழைப்பை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1980 களின் துவக்கத்திலிருந்து அதாவது, ரொனால்ட் ரீகன் அமெரிக்க அதிபராகவும், ஜியா பாகிஸ்தானின் ராணுவ சர்வாதிகாரியாக இருந்தபோதும் முதல் கொண்டு, பாகிஸ்தான் அமெரிக்காவிலிருந்து எப் -16 போர் விமானங்களை கொள்முதல் செய்து வருகிறது.
ஒரு எப் -16 விமானத்திற்கு குறைந்தது 18.8 மில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும். 31 அடி இறக்கை கொண்ட இந்த விமானம், அதிகபட்சமாக மணிக்கு 1500 மைல் வேகத்தில் பயணிக்கும்.