சீனாவின் மர்மம்.. 30 நாட்கள் கெடுவிதித்த டிரம்ப்.. உலக சுகாதார அமைப்புக்கு கடும் எச்சரிக்கை
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் சீனாவில் எப்படி தொடங்கியது, எப்படி பரவியது என்பது குறித்து 30 நாட்களில் சுதந்திரமான விசாரணையை நடத்தாவிட்டால் உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகுவோம் என்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார். அத்துடன் உலக சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா வழங்கும் நிதி முழுமையாக முடக்கப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Recommended Video
உலகத்திற்கு கொரோனா பாதிப்பு என்பது ஜனவரி 22ம் தேதி சீனா அதிகாரப்பூர்வமாக எச்சரிக்கை செய்த போதுதான் உலக நாடுகளுக்கு தெரிய வந்தது. ஆனால் அதற்குள் கொரோனா பரவிய வூகான் நகரில் இருந்து லட்சக்கணக்கானோர் உலகின் பல்வேறு நாடுகளுக்கு சென்றுவிட்டனர். இதனால் அவர்கள் மூலம் படிப்படியாக கொரோனா பாதிப்பு அதிகரிக்க ஆரம்பித்தது. ஜனவரி இறுதியில் அமெரிக்கா முதல் கொரோனா வைரஸ் கேஸை சந்தித்தது.
உலக அளவில் 1 லட்சம் பேருக்கு 4.1 கொரோனா நோயாளிகள் மரண விகிதம் - இந்தியாவில் 0.2மட்டுமே!
ஆனால் அடுத்த ஒரு மாதத்தில் வேகமாக அதிகரிக்க ஆரம்பித்தது. மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மாதங்களில் அசுர வேகத்தில் வளர்ந்தது. இன்றைய நிலவரப்படி அமெரிக்காவில் தினமும் 1000க்கும் அதிகமானோர் கொரோனாவால் பலியாகி வருகின்றனர். 15லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் புதிதாக பாதிக்கப்படுகிறார்கள். கொரோனாவால் அமெரிக்காவில் இதுவரை 93 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை சந்திக்காத ஒரு பேரழிவைஅமெரிக்கா கொரோனாவால் சந்தித்துள்ளது.
சரியாக கையாளவில்லை
கொரோனாவுக்கு மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற மனநிலையில் உலகமே தவித்து வருகிறது. இந்த சூழலில் கொரோனா வைரஸ் பரவிய விவகாரத்தில் சீனா சரியான நேரத்தில் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கவில்லை என டிரம்ப் குற்றம்சாட்டியிருந்தார். அத்துடன் சீனா சரியான முறையில் கொரோனா பிரச்னையை கையாளவில்லை என்றும், அவர்கள் நினைத்திருந்தால் சீனாவிற்குள்ளேயே கொரோனாவை கட்டுப்படுத்தி இருக்க முடியும் என்றும் டிரம்ப் கூறியிருந்தார்.
சீனாவின் கைப்பாவை
யாரோ தங்களது வேலையை சரியாக செய்யாதது பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டதாக டிரம்ப் கூறியிருந்தார். இதனிடையே உலக சுகாதார அமைப்பானது சீனாவிற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும், அதன் கைப்பாவையாக செயல்படுவதாகவும் அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். , சுகாதார அமைப்புக்கு ஆண்டுதோறும் வழங்கி வந்த 50 கோடி டாலர் நிதியை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாகவும் அறிவித்து இருந்தார். இந்நிலையில், கடந்த 18ம் தேதி உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதோனம் கெப்ரியசுக்கு அதிபர் டிரம்ப் 4 பக்கம் அளவிலான கடிதம் எழுதி இருக்கிறார்.
சுதந்திரமான விசாரணை
இந்த கடிதத்தில் "நீங்களும் உங்கள் அமைப்பும் சரியாக செயல்படாத காரணத்தால் உலகமானது மிகப்பெரிய இழப்பை சந்தித்து வருகிறது. இதற்கான ஒரே வழி சீனாவிடம் இருந்து விலகி சுதந்திரமாக செயல்பட வேண்டும். இதற்காக சுகாதார அமைப்பில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தம் குறித்து ஏற்கனவே ஆலோசனை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், நீங்கள் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை. நேரத்தை வீணடிக்க எங்களுக்கு விருப்பமில்லை. உலக சுகாதார அமைப்பானது அடுத்த 30 நாட்களில் சீனாவிடம் இருந்து விலகி கொரோனா வைரஸ் தொற்று விவகாரம் குறித்து சுதந்திரமாக விசாரணை நடத்திட வேண்டும் இல்லையென்றால் சுகாதார அமைப்புக்கு அமெரிக்கா வழங்கி வரும் நிதி நிரந்தரமாக முடக்கப்படும். அத்துடன் உலக சுகாதார அமைப்பில் உறுப்பினராக இருப்பதில் இருந்து அமெரிக்கா வெளியேறும். இவ்வாறு டிரம்ப் கூறினார்.
சீனாவும் சம்மதம்
இதனிடையே உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரஸ், உலக நாடுகளின் கோரிக்கைக்கிணங்க பாரபட்சமற்ற ஆய்வு மற்றும் விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். சீனாவும் கொரோனா வைரஸ் எப்படி தொடங்கியது மற்றும் பரவியது என்பது குறித்து விசாரணைக்கு ஒப்புக்கொண்டுள்ளது. உலக சுகாதார கூட்டத்தில் ஆஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை கொண்டுவந்த தீர்மானத்துக்கு இந்தியா உள்பட 116 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.