அமெரிக்க, ரஷ்ய விண்வெளி வீரர்கள் 3 பேர்... சோயுஸ் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பறந்தனர்!
மாஸ்கோ: சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்காக அமெரிக்க மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர்கள் மூன்று பேர் சோயுஸ் விண்கலம் மூலம் விண்வெளிக்கு பறந்துள்ளனர்.
சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் செலவில் விண்வெளியில் மிதக்கும் சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.
அந்தவகையில், கடந்த ஓராண்டுகளுக்கும் மேலே விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த அமெரிக்க விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி (52) மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர் மிக்கேல் கொர்னியங்கோ (55) ஆகிய இருவரும் சமீபத்தில் பூமிக்கு திரும்பினர்.
இந்நிலையில், தற்போது அவர்களுக்குப் பதில் அமெரிக்க விண்வெளி வீரர் ஜெப் வில்லியம்ஸ், ரஷ்ய விண்வெளி வீரர்கள் ஓலக் ஸ்க்ரைபோச்கா, அலெக்சி ஓவ்சினின் ஆகிய 3 பேரும் விண்வெளி நிலையத்திற்கு ஆய்வுக்காகச் சென்றுள்ளனர்.
இவர்கள் மூவரும் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் மூலம் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 2.56 மணிக்கு கஜகஸ்தான் நாட்டில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புறப்பட்டனர். அவர்கள் அங்கு சில காலம் தங்கி இருந்து ஆராய்ச்சிப் பணியில் ஈடுபடுவார்கள்.
தற்போது விண்வெளிக்கு பறந்துள்ளவர்களில் ஜெப் வில்லியம்ஸ் ஏற்கனவே 3 முறை விண்வெளிப்பயணம் மேற்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.