ஜி20 மாநாட்டில் சர்ச்சை- ரஷ்யாவின் உக்ரைன் தலையீட்டுக்கு அமெரிக்கா, ஆஸி, ஜப்பான் எதிர்ப்பு!
பிரிஸ்பேன்: உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா தலையிடுவதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன. மேலும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கவும் ரஷ்யா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மூன்று நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.
ஆஸ்திரேலியாவில் ஜி 20 நாடுகளின் மாநாடு நடைபெறுகிறது. இம் மாநாட்டில் கலந்துகொள்ளும் முன், ரஷ்யாவின் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த அந்நாட்டு அதிபர் புதின், உக்ரைன் விவகாரத்தில் ஜி20 நாடுகள் மீதான தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்கா அதிபர் ஒபாமா, ஆஸ்திரேலியா பிரதமர் அபோட், ஜப்பான் பிரதமர் சின்சோ அபே ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில், உக்ரைனின் கிரிமியாவை ரஷ்யா இணைத்தது கொண்டது சரியானது அல்ல. அதேபோல் கிழக்கு உக்ரைனில் ரஷ்யாவின் தலையீடும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.
மலேசியாவின் எம்.ஹெச்.17 விமானத்தை சுட்டு வீழ்த்தியவர்களை நீதியின் முன் ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இப்படி ஜி20 நாடுகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதால் ரஷ்யா அதிபர் புதின், அதிகாரப்பூர்வ விருந்து நிகழ்ச்சி, செய்தியாளர்கள் சந்திப்பை தவிர்த்துவிட்டு பாதியிலே நாடு திரும்ப உள்ளார்.