எங்கக்கிட்டயேவா.. தென் கொரியாவில் போர் விமானங்களை குவித்தது அமெரிக்கா! உச்சக்கட்ட பதற்றம்!
வடகொரியாவின் மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா தென் கொரியாவில் தனது போர் விமானங்களை குவித்துள்ளது.
பியாங்ஜியாங்: வடகொரியாவின் மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா தென் கொரியாவில் தனது போர் விமானங்களை குவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வடகொரியா ஜாங்காங் என்னுமிடத்தில் இருந்து கடந்த 28ஆம் தேதி இரவு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை செலுத்தியுள்ளது. இந்த ஏவுகணை ஜப்பானின் சிறப்புப் பொருளாதார மண்டலம் அருகே கடலில் விழுந்ததாகத் தென்கொரியாவும் ஜப்பானும் தெரிவித்தன.
கொரிய நேரப்படி இரவு பதினொன்றே முக்கால் மணிக்கு இந்த ஏவுகணை செலுத்தப்பட்டதாகத் தென்கொரிய அரசு தெரிவித்தது. ஐநாவின் தடையை மீறி இரண்டாவது முறையாக வடகொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
அமெரிக்கா எச்சரிக்கை
இந்நிலையில் வடகொரியாவின் இந்த மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க போர் விமானங்கள் கொரிய தீபகற்பத்தின் மீது பறந்து எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 28 ஆம் தேதி மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்த வடகொரியா இந்த ஏவுகணையால் ஒட்டுமொத்த அமெரிக்காவையும் அழித்துவிட முடியும் எனவும் வடகொரியா மிரட்டல் விடுத்தது.
விமானங்களை அனுப்பிய அமெரிக்கா
இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா தனது போர் விமானங்களை தென் கொரியாவிற்கு அனுப்பி வைத்துள்ளது. தென் கொரியாவிற்கு வந்த அமெரிக்காவின் பி-1 போர் விமானங்கள் கொரிய தீபகற்பத்தின் மீது பலமுறை பறந்து வட்டமடித்தன.
மிரட்டலுக்கு பதிலடி
தென்கொரியாவின் விமானப்படை தளத்திற்கு மேல் பறந்த அமெரிக்க போர் விமானங்களுக்கு பறந்த படியே எரிபொருள் நிரப்பும் காட்சிகளை அமெரிக்க விமானப்படை வெளியிட்டுள்ளது. வடகொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை மற்றும் போர் மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தனது விமானங்களை கொரிய தீபகற்பத்திற்கு அனுப்பி உள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளது.
தென்கொரியா, ஜப்பான்
அமெரிக்க போர் விமானங்களுடன் தென்கொரியா மற்றும் ஜப்பான் போர் விமானங்களும் இந்த பதில் நடவடிக்கையில் ஈடுபட்டன. வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகள் மூலம் அமெரிக்காவைச் சீண்டி வருகிறது.
உச்சக்கட்ட போர் பதற்றம்
இந்நிலையில் அமெரிக்காவும் பதிலடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.