அமெரிக்கா, பிரிட்டன், அமீரகம்.. கொரோனாவை முறியடித்து முன்னேறும் நாடுகள்.. தத்தளிக்கும் இந்தியா
சென்னை:அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் கொரோனா பிரச்சனையிலிருந்து மீண்டு நீண்ட பெருமூச்சு விடும், அதே நேரத்தில் இந்தியாவில் மூச்சுவிட ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்ற அவலக் குரல்கள் பல இடங்களில் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன.
இரு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட அனைவரும் இனிமேல் முககவசம் இல்லாமல் வெளியே செல்லலாம் என்று சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் ஒரு அறிவிப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவில் 154.6 மில்லியன் மக்கள் இதுவரை ஒரு டோஸ் அளவுக்காவது தடுப்பூசி போட்டுள்ளனர். அதாவது, மொத்த மக்கள் தொகையில் 58% பேர் ஒரு முறையாவது தடுப்பூசியை செலுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்கிறது புள்ளிவிவரம்.
அமெரிக்காவில் 3 வகை தடுப்பூசிகள்
ஃபைசர், மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிகள் அங்கு புழக்கத்தில் உள்ளன. இதில் ஜான்சன் மற்றும் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசி ஒரு டோஸ் மட்டும் போட்டுக் கொண்டால் போதுமானது. மற்ற இரு தடுப்பூசிகள் இரு டோஸ் போட்டுக் கொள்ள வேண்டும். ஆனால், இரண்டு தடுப்பூசிகள் செயல்பாட்டில் உள்ள இந்தியாவில் இதுவரை வெறும் 1.8 சதவீதம் மக்கள் மட்டும்தான் தடுப்புசி செலுத்தியுள்ளனர் . மொத்த மக்கள் தொகையில் 50 விழுக்காட்டிற்கு மேலாக தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளும் பட்சத்தில்தான் இந்த நோய் பரவலை வெகுவாகக் குறைக்க முடியும் என்கிறார்கள் சர்வதேச நிபுணர்கள். பல இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுவதால் மக்கள் குமுறுகிறார்கள்.
அசத்திய பிரதமர் போரிஸ் ஜான்சன்
பிரிட்டனில் 60 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்ற நிலையில்தான், அங்கு பல்வேறு ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்குப் பிறகு, இங்கிலாந்தில் கடந்த திங்கள்கிழமை, முழுமையாக 24 மணி நேரத்திற்கு ஒரு நபருக்குக் கூட கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. அடுத்த வாரம் முதல் உணவகங்கள் போன்றவற்றை திறப்பதற்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டுள்ளார். கடுமையான ஊரடங்கு மற்றும் அதிகப்படியான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தியது ஆகியவற்றின் மூலமாக நோய் பரவலை கட்டுப்படுத்தி அசத்தியுள்ளார் பிரதமர் போரிஸ் ஜான்சன்.
ஐக்கிய அரபு அமீரகம்
இன்னொரு பக்கம் ஐக்கிய அரபு அமீரக நாடுகள் பலவற்றிலும் 50 விழுக்காட்டுக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அங்கு நோய் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. பல இடங்களில் மக்கள் முக கவசம் இல்லாமல் வெளியே செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழில் அதிபர்களும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நிலங்கள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர். சமீபகாலமாக அமீரகத்தில் நிலம் வாங்குவது 2 00 சதவீதத்துக்கும் மேலாக அதிகரித்துள்ளதாக அங்கிருந்து வரும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச இதழ்கள்
இப்படி உலகின் பல நாடுகள் கொரோனா கோரப் பிடியில் இருந்து தப்பித்து பெருமூச்சு விட்டபடி தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதாக கிடைக்கும் நல்ல செய்திகளுக்கு மத்தியில்தான், இந்தியா இந்த தோற்று நோயுடன் கடுமையாக போராடி வருகிறது. இரண்டாவது அலை குறித்த விழிப்புணர்வு மத்திய அரசுக்கு போதிய அளவுக்கு இல்லை என்று பல்வேறு சர்வதேச மருத்துவ இதழ்கள் விமர்சனம் செய்து வருகின்றன. இந்திய பிரதமர் இந்த விஷயத்தில் மெத்தனம் காட்டியதாகவும், போலி தேசியவாதம் கட்டமைக்கப்பட்டு, நோய் பரவலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் மத்திய அரசு இருந்தது என்றும் சர்வதேச ஊடகங்கள் குற்றம்சாட்டுகின்றன.
எங்கு பார்த்தாலும் கூட்டம்
5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடத்தியது, மக்களை கூட்டம் கூட்டமாக கூட்டி வந்து பிரச்சாரக் கூட்டங்களில் பங்கேற்க செய்தது , போன்றவற்றை நோய் பரவலின் முக்கிய காரணங்கள். இவற்றை எதிர்க்கட்சிகள் செய்தால் கூட அது வேறு. ஆனால் , மத்தியில் ஆளும் அதிகாரத்தில் உள்ள பாஜக இவ்வாறு செய்தது. மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய, நரேந்திர மோடி இதுவரை இப்படி ஒரு கூட்டம் வந்ததில்லை என்று கூடிய கூட்டத்தை பார்த்து பெருமையாக பேசினார். அடுத்த சில நாட்களில் நோய் பரவல் மிக அதிகரித்த நிலையில்தான் , தேர்தல் பிரச்சாரத்தை ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி போன்ற தலைவர்கள் ரத்து செய்தனர். அதன் பிறகுதான் நரேந்திர மோடியின் பிரதமர் தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்தார். மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
முன்யோசனை இல்லை
இன்னொரு பக்கம் கும்பமேளா விழா பெரிய கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாமல் நடைபெற்றது, இன்னொரு பக்கம் ஊரடங்கு உத்தரவு பெரிய அளவுக்கு அமல் படுத்தப்படாமல் ரயில்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். திரையரங்குகள் திறக்கப்பட்டன. இப்படி எதிர்கொள்ளப் போகும் பிரச்சினை பற்றி எந்த யோசனையும் இல்லாமல் அத்தனையையும் திறந்துவிட்டு பார்த்துக்கொண்டிருந்தது மத்திய அரசு.
தடுப்பூசி பற்றாக்குறை
கொரோனாவுக்கு எதிரான பேராயுதமான, தடுப்பூசி போதியளவு இல்லை. அவற்றை முன்கூட்டியே அதிகம் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதையும் மறந்து விட்டது மத்திய அரசு. தடுப்பூசி குறித்து மக்களுக்கு அச்சம் இருந்தால், அதை போக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் யோசிக்கவில்லை. இதன் காரணமாகதான் உலக நாடுகள் அத்தனையும் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கும் நிலையில், இந்தியா ஆக்ஸிஜன் பற்றாக்குறை, பெட் பற்றாக்குறை என்ற பெரும் பிரச்சினைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. சிலகாலம் ஊரடங்கு உத்தரவை மிகக் கடுமையாக செயல்படுத்தி, பல்வேறு தடுப்பூசிகளை சந்தைக்கு கொண்டு வந்து, மிக விரைவாக தடுப்பூசி இயக்கத்தை மேற்கொண்டால்தான் இந்த அபாயத்திலிருந்து நாடு மீள முடியும் என்கிறார்கள் மருத்துவ துறை வல்லுநர்கள்.