இந்தியாவுக்கு 6 அணு உலைகளைக் கட்டித் தரும் அமெரிக்கா.. !
வாஷிங்டன்: இந்தியாவில் ஆறு அணு உலைகளை கட்டித் தரவுள்ளது அமெரிக்கா. இதுதொடர்பான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. அமெரிக்க நிறுவனம் இந்த அணு உலைகளைக் கட்டித் தரும்.
2008ம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட அணு சக்தி ஒப்பந்தத்திற்குப் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள அணு சக்தி தொடர்பான முக்கிய - முதல் ஒப்பந்தம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
2008ம் ஆண்டு அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பிரதமர் மன்மோகன் சிங்கும், அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும் இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதை கடுமையாக எதிர்த்த இடதுசாரி கட்சிகள் காங்கிரஸ் கூட்டணியை விட்டு விலகிய சம்பவத்தையும் நாடு அப்போது கண்டது.
அதன் பின்னர் தற்போதுதான் முதல் முறையாக இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஒரு முக்கிய ஒப்பந்தத்தை இரு நாடுகளும் மேற்கொண்டுள்ளன. அதிபர் பராக் ஒபாமாவை பிரதமர் மோடி சந்தித்தபோது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவில் ஆறு அணு உலைகளை அமெரிக்கா கட்டித் தரும். ஏற்கனவே கூடங்குளத்தில் ரஷ்ய உதவியுடன் அணு மின் நிலையத்தை இந்தியா அமைத்துள்ளது என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் அமெரிக்காவின் அணு சக்தித் தொழில்நுட்பத்துடன் கூடிய அணு மின் நிலையம் இந்தியாவில் அமையவுள்ளது.
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் என்ன. இதற்காக ஏன் அமெரிககா அந்தப் பாடு பட்டது. இந்தியா ஏன் இந்த ஒப்பந்தத்திற்காக அப்போது மெனக்கெட்டது என்பது போன்ற பல காரணிகளை விளக்கி 2008ம் ஆண்டே தட்ஸ்தமிழ் ஆசிரியர் தொடர் கட்டுரைகளை எழுதி அதை அலசி ஆராய்ந்திருந்தார்.. அதை இங்கு (/editor-speaks/2008/06/26-what-does-indo-us-nuclear-deal-mean.html) சென்று அவற்றைப் படித்தறியலாம்...!