'பெண் தூதர் கைது கிடக்கட்டும்': இந்தியர்களே எங்க ஊர்ல 'டூர்' அடிங்க.. அழைக்கும் அமெரிக்கா!
நியூயார்க்: இந்தியப் பெண் துணைத் தூதர் கைது என்றப் பெயரில் அவமானப் படுத்தப் பட்டுள்ள நிலையில், அமெரிக்காவிற்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதாகவும், இதே நிலைத் தொடர்ந்தால், வரும் 2018ம் ஆண்டில் அமெரிக்காவிற்கு வருகை புரியும் இந்தியர்களின் எண்ணிக்கை தற்போது இருப்பதைக் காட்டிலும் 50 சதவீதம் அதிகரிக்கும் என சென்னைக்கான அமெரிக்க துணைத் தூதரக அதிகாரி ஜெனிஃபர் மெக்கிண்டயர் பேசியுள்ளது நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னையில், பிராண்ட் யுஎஸ்ஏ எனும் தனியார் அமைப்பின் சார்பில் அமெரிக்க சுற்றுலாத் துறையை மேன்படுத்தும் நோக்கில், நேற்று ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில், 125-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்கள், அமெரிக்காவைச் சேர்ந்த ஆறு சுற்றுலா பயண ஏற்பாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அதில், சென்னைக்கான அமெரிக்கத் துணைத் தூதரக அதிகாரி ஜெனிஃபர் மெக்கிண்டயர் கலந்து கொண்டார். அப்போது விழாவில் அவர் பேசியதாவது:
சுற்றுலா தான் ஒரேவழி....
இரு நாடுகளுக்கு இடையே பரஸ்பர புரிதலை ஏற்படுத்துவதற்கு சுற்றுலா சிறந்த வழி. இந்த வகையில் இந்தியா - அமெரிக்கா இடையேயான கலாசார மற்றும் சுற்றுலா ரீதியான தொடர்பு வலுவாக உள்ளது.
அதிகரிக்கும் இந்திய பயணிகள்....
கடந்த 2012-ஆம் ஆண்டு 7.24 லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவுக்கு வருகை புரிந்துள்ளனர். இவர்களில் 20 சதவீதம் பேர் தொழில்ரீதியான காரணங்களுக்காக அமெரிக்கா வந்துள்ளனர். இது, 2011-ஆம் ஆண்டை விட ஒன்பது சதவீதம் அதிகம்.
இன்னும் அதிகரிக்கும்....
இந்த எண்ணிக்கையின் அடிப்படையில், வரும் 2018-ஆம் ஆண்டு, அமெரிக்காவுக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தற்போதுள்ள அளவை விட 50 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்.
எளிய நடைமுறை...
விண்ணப்பதாரகளுக்கு எளிதில் விசா கிடைக்கும் வகையில், விண்ணப்பித்த ஒரு வாரத்துக்குள் சான்றிதழ் சரிபார்ப்பு, சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த அடுத்த நாளே விசா வழங்குவது என விசா நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன' என அவர் தெரிவித்தார்.
பதிலளிக்க மறுப்பு....
நிகழ்ச்சிக்கு பிறகு, இந்திய துணைத் தூதரக அதிகாரி தேவயானி கோப்ரகாடே கைது விவகாரம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க ஜெனிஃபர் மெக்கின்டயர் மறுத்துவிட்டார்.
துணைத்தூதர் பேச்சால் பரபரப்பு...
அமெரிக்காவில் இந்திய பெண் துணைத் தூதர் தேவயானி பொது இடத்தில் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியா-அமெரிக்கா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தனது சுற்றுலாத்துறையை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் வியாபார நோக்கோடு அமெரிக்க துணைத்தூதர் பேசி இருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அவப்பெயர்...
இந்தியாவில் பாலியல் பலாத்காரம் அதிகம், எனவே, சுற்றுலாப்பயணிகள் அதிலும் குறிப்பாக பெண்கள் தனியாக எங்கும் செல்ல வேண்டாம் என சமீபத்தில் சில நாடுகள் எச்சரிக்கை விடுத்தன. ஆனால், கண்ணியம் மற்றும் குடும்ப உறவுகளை பேணிப் பாதுகாக்கும் நாடான இந்தியாவில் சிலக் காமக் கொடூரர்களின் செயல்களால் மொத்த நாட்டிற்குமே அவப்பெயர் உண்டாகி வருகிறது.
அநாகரீகமான செயல்கள்...
ஆனால், இந்தியப் பெண் துணைத் தூதர் ஒருவரை குழந்தையை பள்ளிக்கு விடச் சென்றபோது, பொது இடத்தில் வைத்துக் கைது செய்தது, ஆடைகளை களைந்து அநாகரீகமாக சோதனையிட்டது மற்றும் போதைக்குற்றவாளிகளுடன் அமர வைத்தது என அவமானப் படுத்தியது அமெரிக்கா.
பணத்திற்கு மட்டும்....
நன்கு படித்த துணைத் தூதருக்கு, அதுவும் பெண்ணென்றும் பாராமல் இத்தகைய டெயல்களில் ஈடுபட்ட அமெரிக்கா, தற்போது இந்தியர்களின் வருகையை ஆவலோடு எதிர்பார்ப்பது, இந்தியர்களை வணிக ரீதியாக மட்டுமே மதிக்கும் தன்மையைக் கொண்டுள்ளது என்பதை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.