சி.ஐ.ஏ.விடம் பயிற்சி பெற்று ஐ.எஸ். இயக்கத்தில் இணையும் சிரியா தீவிரவாதிகள்: அதிர்ச்சியில் யு.எஸ்.
டமாஸ்கஸ்: சிரியாவில் அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.விடம் ராணுவ பயிற்சி பெறும் கிளர்ச்சியாளர்கள் அடுத்தடுத்து ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்துவிடுவது தொடர்கதையாகிவிட்டது அந்நாட்டுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிரியாவின் பல கிளர்ச்சி குழுக்களுக்கு அளித்து வந்த நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தி வருகிறது.
சிரியாவின் வடக்கு பகுதியில் 16க்கும் மேற்பட்ட கிளர்ச்சி குழுக்கள் இயங்கி வருகின்றன. இந்த கிளர்ச்சி குழுக்களுக்கு அமெரிக்கா முழு அளவில் நிதி உதவி வழங்கி வருகிறது.
தற்போது சிரியா புரட்சியாளர்கள் முன்னணி உள்ளிட்ட 4 கிளர்ச்சி குழுக்களுக்கு அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ.விடம் இருந்து நிதி உதவி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் ஹராஹத் அல் ஹாஸ்ம் என்ற கிளர்ச்சி குழு இதுவரை அமெரிக்காவிடம் இருந்து பெருமளவிலான ஆயுதங்களையும் நிதி உதவியையும் பெற்று வந்தது. தற்போது இந்த குழுவுக்குமான நிதி உதவியை பாதியாக அமெரிக்கா குறைத்துவிட்டதாம்.
சிரியாவில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு சி.ஐ.ஏ. ஆயுத பயிற்சி கொடுத்திருந்தது. ஆனால் இவர்களில் பலர் காணாமல் போய்விட்டதாக தெரியவந்துள்ளது. இப்படி பயிற்சி பெற்று காணாமல் போனவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் மற்றும் அல்கொய்தாவுடன் தொடர்புடைய அல் நுஸ்ரா முன்னணியில் இணைந்துவிட்டதாகவும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதனைத் தொடர்ந்தே கிளர்ச்சி குழுக்களின் மீது நம்பிக்கை இழந்த அமெரிக்கா சிறிது சிறிதாக நிதி உதவியை குறைத்து வருவதாக கூறப்படுகிறது.