25 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை லெபனானுக்கு கொடுத்தது அமெரிக்கா!!
பெய்ரூட்: ஐ.எஸ். தீவிரவாதிகள், அல்கொய்தா இயக்கத்தினரை எதிர்த்து போரிடுவதற்காக லெபனான் ராணுவத்துக்கு 25 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை அமெரிக்கா வழங்கியுள்ளது.
லெபனான் -சிரியா எல்லையில் ஐ.எஸ். தீவிரவாதிகள், அல்கொய்தாவின் நுஸ்ரா முன்னணி ஆகியவை ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அதேபோல் ஈரான் ஆதரவு ஹெஸ்பொல்லாவும் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன.
ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன.
அத்துடன் குர்து மற்றும் யாசிதி இனத்தவருக்கும் ஆயுதங்களை அமெரிக்கா வழங்கி வருகிறது. இந்த நிலையில் லெபனான் நாட்டு ராணுவத்துக்கும் 25 மில்லியன் டாலர் மதிப்பிலான பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் அமெரிக்கா 100 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை லெபனானுக்கு வழங்கியிருந்தது. இந்த நிலையில் பெருமளவிலான அமெரிக்காவின் ஆயுதங்கள் லெபனானின் பெய்ரூட் துறைமுகத்துக்கு வந்திறங்கின.
இவற்றைப் பார்வையிட்ட லெபனானுக்காக அமெரிக்கா தூதர் டேவி ஹலே, எங்கள் இருநாடுகளும் தீவிரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தை நடத்தி வருகின்றன. பயங்கரவாதத்தை வீழ்த்தவே இத்தகைய ஆயுத உதவிகளை அளித்து வருகிறோம் என்றார்.