ரஷ்யாவுடனான யுத்தத்துக்கு அமெரிக்கா மும்முரம்? ஏவுகணைகளுடன் போர் விமானங்கள் துருக்கியில் குவிப்பு!
அங்காரா: சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகள் மீது உக்கிர தாக்குதலில் ஈடுபட்டு வரும் ரஷ்யாவுடனான யுத்தத்துக்கு தயாராகும் வகையில் துருக்கியில் ஏவுகணைகள் தாங்கிய போர் விமானங்களை அமெரிக்கா குவித்து வருகிறது.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யா தீவிரமாக களமிறங்கியது. குறிப்பாக அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மீது சரமாரி தாக்குதல்களை ரஷ்யா நடத்தி வருகிறது.
அமெரிக்காவும் அதன் கூட்டுப் படைகளும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக விமான தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் ரஷ்யா - அமெரிக்கா இடையே தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.
இந்நிலையில் ஏவுகணைகள் தாங்கிய எப்-15சி போர்விமானங்களை பெருமளவில் துருக்கியில் தரை இறக்கியுள்ளது அமெரிக்கா. அதுவும் சிரியா எல்லையையொட்டிய துருக்கி விமானப் படை தளத்தில் இவை நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த போர் விமானங்களில் பொருத்தப்பட்டுள்ள ஏவுகணைகள் எதிரிநாட்டு ஏவுகணைகளை நடுவானில் இடைமறித்து தாக்கும் வல்லமை கொண்டது. தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களுக்கு இத்தகைய அதிநவீன போர் விமானங்களை கொண்டுவந்திருக்க வாய்ப்பில்லை.... இது ரஷ்யாவுடனான மோதலுக்கான முன் தயாரிப்புகளாக இருக்கலாம் என்கின்றனர் ராணுவ வல்லுநர்கள்.