ஆப்கானில் ஐஎஸ் தீவிரவாத முகாம்கள் மீது 22,000 பவுண்ட் குண்டை வீசி அமெரிக்கா அதிரடி தாக்குதல் !
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா பயங்கர சக்தி வாய்ந்த வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காபூல்: ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதுங்கியுள்ள ஐ.எஸ்.தீவிரவாதிகளின் முகாம்களை குறி வைத்து 22,000 பவுண்ட் எடையுள்ள அதிக சக்தி வாய்ந்த குண்டு வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச அளவில் பல நாடுகளில் தீவிரவாதிகளை அழித்தொழிப்பதாக கூறி அமெரிக்கா படைகள் முகாமிட்டுள்ளன. இந்த நாடுகளில் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா விமானப் படை பொதுவாக 250 முதல் 2,000 பவுண்ட் எடையுள்ள குண்டுகளையே வீசி வருகிறது.
2013-ம் ஆண்டு ஈராக்கில் ஜிபியூ-43 என்கிற மிகப் பெரிய குண்டை சோதனை முறையில் வீசி தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து ஆப்கானில் பதுங்கியுள்ள ஐஎஸ் தீவிரவாதிகள் மீது நேற்று அதே ரகத்தில் 22,000 பவுண்ட் எடையுள்ள அதிக சக்தி வாய்ந்த குண்டை அமெரிக்கா வீசியது.இந்த குண்டானது, அணுகுண்டு அல்லாத குண்டுகள் வரிசையில் அதிக எடை கொண்டதும், சக்தி வாய்ந்ததும் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானின் ஆசின் மாவட்டம் நங்கர்ஹார் பகுதியில்தான் ஐஎஸ் தீவிரவாதிகளின் முகாம்கள் உள்ளன. இந்த பகுதியை குறிவைத்தே அமெரிக்கா படைகள் 22,000 பவுண்ட் எடை கொண்ட அதிக சக்தி வாய்ந்த குண்டை வீசியது. இந்த பகுதியில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகளின் சுரங்கங்கள், குகைகள் ஆகியவற்றை இலக்கு வைத்தே இவ்வளவு பெரிய குண்டை அமெரிக்கா வீசியுள்ளது.
அமெரிக்காவின் இத்தாக்குதலில் அப்பாவி பொதுமக்களும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அமெரிக்காவின் இந்த அதிரடியான தாக்குதலானது சர்வதேச நாடுகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளன.