2002ல் இருந்து 10 ஆண்டுகளாக ஜெர்மனி அதிபர் மெர்க்கலின் போனை ஒட்டுக் கேட்ட அமெரிக்கா
வாஷிங்டன்: அமெரிக்க உளவாளிகள் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கலின் போனை கடந்த 2002ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளாக ஒட்டுக் கேட்டு வந்தார்கள் என்று ஜெர்மனியைச் சேர்ந்த டெர் ஸ்பீகல் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் உள்பட 35 நாடுகளின் தலைவர்களின் போன் மற்றும் இமெயிலை ஹேக் செய்தது என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. தனது போனை அமெரிக்கா ஒட்டுக் கேட்டதை அறிந்த மெர்க்கல் ஆத்திரம் அடைந்தார்.
இந்நிலையில் அவரது போனை அமெரிக்க உளவாளிகள் கடந்த 2002ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளாக ஒட்டுக் கேட்டு வந்தார்கள் என்று ஜெர்மனியைச் சேர்ந்த டெர் ஸ்பீகல் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் ஒட்டுக் கேட்ட விவகாரம் தொடர்பாக அமெரிக்க தூதருக்கு ஜெர்மனி அரசு சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்க இரண்டு உளவுத்துறை அதிகாரிகளை ஜெர்மனி அரசு அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கிறது.
மெர்க்கலின் போன் ஒட்டுக் கேட்கப்பட்டது குறித்து அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவுக்கு தெரியும் என்று செய்திகள் வந்துள்ளன. கடந்த 2010ம் ஆண்டே இது குறித்து தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் கெய்த் அலெக்சாண்டர் ஒபாமாவிடம் தெரிவித்தாராம். இதை கேட்ட ஒபாமா ஒட்டுக் கேட்பதை தடுத்து நிறுத்தாமல் தொடர்ந்து நடக்கட்டும் என்று கூறியதாக தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.