அமெரிக்க தேர்தல் ஏன் மங்களகரமான செவ்வாய்கிழமையில் நடைபெறுகிறது தெரியுமா?
அமெரிக்காவில் தேர்தல் செவ்வாய்கிழமையில்தான் பாரம்பரியமாக நடைபெறுகிறது. நவம்பர் முதல் திங்கட்கிழமைக்கு மறுநாள் செவ்வாய்கிழமை தேர்தல் நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும்.
வாஷிங்டன் : அமெரிக்காவில் நாளை நவம்பர் 3ஆம் தேதி செவ்வாய்கிழமை அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது. ஒரு வாரத்தில் ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை 7 நாட்கள் இருக்கும் போது நவம்பர் மாத முதல் செவ்வாய்கிழமையை அமெரிக்கர்கள் தேர்தல் நடத்த தேர்வு செய்தது ஏன் என்பது பற்றி சுவாரஸ்யமான தகவல் உள்ளது.
அனல் பறக்கும் அமெரிக்க தேர்தல் களத்தில் மங்களகரமான செவ்வாய்கிழமையை அமெரிக்க மக்கள் தேர்வு செய்திருக்கிறார். நாளை பல கோடி மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த தேர்தல் நடைபெற உள்ளது. கொரோனா காலமாக இருப்பதால் முன்கூட்டியே 9 கோடி மக்கள் வாக்களித்து விட்டனர்.
நேரடியாக நாளைய தினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்திய தேர்தலை போல அல்லாமல் அமெரிக்க தேர்தலில் நிறைய சுவாரஸ்யங்கள் உள்ளன. நம்முடைய நாட்டில் பெரும்பாலும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில்தான் பொது தேர்தல் நடைபெறும். கடுமையான வெயில் காலத்தில் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் நம்ம ஊர் அரசியல்வாதிகள் ஈடுபடுவார்கள்.
அங்கேயுமா? பாதியிலேயே வெற்றி பெற்றதாக அறிவிக்க டிரம்ப் திட்டமாம்.. எதிர்பார்ப்பில் ஆதரவாளர்கள்
நவம்பர் மாத சீதோஷ்ணம்
நவம்பர் மாதத்தில் அமெரிக்காவில் அறுவடை முடிந்திருக்கும் அதிக வெயிலோ, மழையோ இல்லாமல் சீதோஷ்ணமும் அற்புதமாக இருக்கும். விவசாயிகள் தங்களின் பணிகள் முடிந்த களைப்பு தீர ஓய்வெடுத்துக்கொண்டிருப்பார்கள் என்பதால் இந்த மாதத்தில் அமெரிக்கா முழுவதும் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.
செவ்வாய்கிழமை வாக்குப்பதிவு
வாரத்தின் கடைசி நாட்களான சனி, ஞாயிறு ஓய்வெடுக்கவும், சர்ச் சென்று பிரார்த்தனை செய்யவும் அமெரிக்க மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர். புதன்கிழமையில் சந்தை நடைபெறும். விவசாயிகள் பலரும் சந்தைக்கு சென்று குவிந்து விடுவார்கள். திங்கட்கிழமை என்றால் வருவது கடினம், வாக்குச்சாவடிகள் தூரத்தில் இருந்தால் போய் வாக்களிக்க முடியாது. எனவேதான் வியாழக்கிழமையையும் தேர்தல் நடத்துவதை தவிர்த்து விட்டனர். அனைவருக்கும் உகந்த பொதுவான நாளாக செவ்வாய்கிழமையை தேர்வு செய்துள்ளனர்.
பொது விடுமுறை இல்லை
அமெரிக்காவில் தேர்தல் நடைபெறும் நாளில் பொது விடுமுறை விடுவதில்லை. அதற்கு மாறாக வேலை செய்பவர்கள், அலுவலகம் செல்பவர்கள் முன்கூட்டியே வாக்களிக்கும் வசதி உள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டை காட்டிலும் இந்த 2020ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் 9 கோடி பேர் முன்கூட்டியே வாக்களித்துள்ளனர்.
புனித நாள்
நவம்பர் மாதம் முதல் நாளை புனித நாளாக கடைபிடிக்கின்றனர். அதன்பின்னர் முதல் திங்கட்கிழமைக்கு மறுநாள் வரும் செவ்வாய்கிழமையை தேர்தல் நாளாக தேர்வு செய்துள்ளனர். இப்போது இந்த தேர்தல் நாளை மாற்ற வேண்டும் என்றும் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் பல நூற்றாண்டுகால பாரம்பரியத்தை மாற்றுவார்களா அமெரிக்க வாழ் மக்கள்.