வன்முறையை தூண்டும் வகையில் டிரம்ப் பேச்சு... வரம்பு மீறி பேசுவதாக ஹிலாரி குற்றச்சாட்டு
வாஷிங்டன்: அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாடு குறித்து அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்கு ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் நிறைவடைவதையொட்டி, வரும் நவம்பர் 8-ம் தேதி புதிய அதிபருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும் குடியரசு கட்சியின் சார்பில் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர்.
இதனிடையே அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் டொனால்ட் டிரம்ப்.
அதிபர் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், இரு அதிபர் வேட்பாளர்களும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஹிலாரி கிளிண்டன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் டொனால்டு டிரம்ப் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்.
அதாவது, தற்காப்புக்காக தனிநபர்கள் துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான உரிமையை தான் அதிபரானால் ரத்து செய்துவிடுவேன் என்று ஹிலாரி கூறுகிறார். இதனால், துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை பறிபோய் விடும் நிலை ஏற்படுவதோடு, நபர்களின் பாதுகாப்பு கேள்விக் குறியாகிவிடும்.
எனவே, துப்பாக்கி உரிமம் வைத்திருப்பவர்கள் நினைத்தால், அதிபர் தேர்தலில் ஹிலாரி வெற்றி பெறுவதைத் தடுக்க முடியும் என்று டிரம்ப் தெரிவித்தார். டிரம்ப்பின் இந்த கருத்து வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாக சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்நிலையில், டொனாட் டிரம்ப் வரம்பு மீறி பேசுகிறனார் என ஹிலாரி கிளிண்டன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தேர்தல் பொதுக்கூட்டத்தில் ஹிலாரி கிளின்டன் கூறியதாவது: எனது நண்ர்களே, வார்த்தைகள் மிக முக்கியமானவை. அதிபருக்கான போட்டியில் இருக்கும் போதோ அல்லது அமெரிக்காவின் அதிபராக இருந்தாலோ, நீங்கள் வெளியிடும் வார்த்தைகள் பல பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும். டொனால்ட் டிரம்பின் இது போன்ற ஒவ்வொரு சர்ச்சைக்குரிய சம்பவங்களும் அவர் அதிபர் பதவிக்கான குணத்தை கொண்டிருக்கவில்லை என்பதை காட்டுகிறது என்று கூறினார்.