அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்.. பல மாநிலங்களில் கடும் இழுபறி!
வாஷிங்டன்(யு.எஸ்): அமெரிக்காவின் மேற்கு மாநிலங்களில் இன்னும் வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கும் வேளையில், கிழக்கு மாநிலங்களில், வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்துவிட்டது.
வழக்கமான குடியரசுக் கட்சி மாநிலங்களில் டொனால்ட் ட்ரம்பின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதே போல் மசசூசட்ஸ், நியூயார்க், மேரிலாண்ட் உள்ளிட்ட ஜனநாயகக் கட்சியின் மாநிலங்களில் ஹிலரி முன்னிலையில் இருக்கிறார்.
ஃப்ளோரிடாவில் ட்ரம்ப் 1 சதவீதம் அதிகமாக முன்னிலையில் இருந்தாலும், இன்னும் இழுபறி என்றே கூறப்படுகிறது.
எதிர்பாராத திருப்பமாக மிஷிகன் மாநிலத்தில் ட்ரம்ப் 5 சதவீதம் கூடுதலாகப் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
வடக்கு கரோலைனாவில் ஹிலரி முன்னிலையில் இருக்கிறார். கடந்த தேர்தலில் குடியரசுக் கட்சியின் மிட் ராம்னி இங்கு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதிபர் வாக்குகள் எண்ணிக்கையில் ட்ரம்ப் தற்போது முன்னிலையில் இருக்கிறார். வாக்கு எண்ணிக்கை முடியவில்லை என்றாலும், முன்னிலை மற்றும் வித்தியாசத்தை கணக்கிட்டு, அந்தந்த மாநிலத்தில் ட்ரம்ப் அல்லது ஹிலரி என்று ஊடகங்கள் அறிவிக்கின்றன.
கடும் போட்டி நிலவும் மாநிலங்களில் வாக்கு வித்தியாசங்கள் குறைவாக இருப்பதால், மொத்த எண்ணிக்கையும் முடியும் வரை இறுதி முடிவு தெரிய வாய்ப்பில்லை.
- நமது அமெரிக்க செய்தியாளர்