ஹிலரியை வீழ்த்திய அந்த இமெயில் சர்ச்சை!
வாஷிங்டன்: இன்று நடந்து முடிந்த தேர்தலில் ஹிலரி க்ளிண்டன் தோல்வியைத் தழுவிவிட்டார். குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் 0.8 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் வென்று புதிய அதிபராகிறார்.
இந்தத் தேர்தலில் ஹிலரி தோற்போம் என்பதை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. தோல்வியைத் தாள முடியாமல் அவர் மிகுந்த வருத்தத்தில் ஆழ்ந்துள்ளார்.
இந்தத் தோல்விக்கு மிக முக்கிய காரணமாகப் பார்க்கப்படுவது ஹிலரியின் நம்பகத் தன்மை. அந்த நம்பகத் தன்மையைச் சிதைத்துவிட்டது இமெயில் விவகாரம்.
அது என்ன இமெயில் விவகாரம்?
ஹிலரி க்ளிண்டன் வெளியுறவுத் துறை செயலாளராக (அமைச்சர்) பணியாற்றிய போது, விதிமுறைகளுக்கு புறம்பாக, தனிப்பட்ட சர்வர் மூலம் அலுவலக இமெயில்கள் அனுப்பினார் என்பதுதான் அந்த குற்றச்சாட்டு.
அலுவலக சர்வரைப் பயன்படுத்தாமல் தனிப்பட்ட சர்வர் மூலம் நாட்டின் ரகசியங்களை அவர் மெயில்களில் அம்பலப்படுத்திவிட்டார் என்று குற்றம்சாட்டி பிரச்சாரம் செய்தார் ட்ரம்ப்.
இதையெல்லாம் திரும்பத் திரும்ப மறுத்து வந்தார் ஹிலரி க்ளிண்டன்.
கடந்த ஜூலை மாதம், அமெரிக்கவின் மத்திய புலனாய்வுத் துறை (எஃப் பி ஐ) இயக்குநர் ஜேம்ஸ் கோமி, பாராளுமன்ற குழுவினரிடம், அரசு ரகசியங்கள் கூடிய இமெயில்கள் எதுவும் தனிப்பட்ட சர்வரிலிருந்து செல்ல வில்லை. அதனால் ஹிலரி மீது குற்றவியல் நடவடிக்கை தேவை இல்லை என்று கூறி இருந்தார்.
ஆனால் தேர்தலுக்கு ஒரு வாரம் இருந்த நிலையில் அதே எஃப்பிஐ இயக்குநர் கோமி, பாராளுமன்றக் குழு உறுப்பினர்களுக்கு, புதிதாக சில இமெயில்கள் கிடைத்துள்ளன, அது ஹிலரியின் தனிப்பட்ட சர்வரிலிருந்து சென்றதாக இருக்கக்கூடும், அரசு ரகசியங்கள் சார்ந்ததா இல்லையா என்று இப்போது கூற இயலாது என்று கடிதம் எழுதி சந்தேகம் கிளப்பினார். இது தேர்தலில் பலமான பாதிப்பை ஏற்படுத்தப் போதுமானதாக இருந்தது.
ஜேம்ஸ் கோமி குடியரசுக் கட்சியைச் சார்ந்தவர். ஒபாமாதான் அவரை இந்த பதவியில் அமர்த்தினார்.
ஆனால் கட்சிப் பாசத்தில், தேர்தலை திசை திருப்புவதற்காக இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார் என்று ஜனநாயகக் கட்சியினர் அப்போது கருத்து தெரிவித்திருந்தனர். அதுவே இப்போது ஹிலரியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது என்கிறார்கள்.