தேவயானியின் பணிப்பெண் அமெரிக்க உளவாளியா? விமான டிக்கெட், வரி விலக்கு வழங்கியது அம்பலம்!
அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதராக இருப்பவர் தேவ்யானி. இவர் வீட்டு வேலைக்கு சங்கீதா என்ற பணிப்பெண்ணை அமர்த்தியதில் விசா முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
பணிப்பெண் சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் கடந்த வாரம் வியாழக்கிழமை துணைத் தூதர் தேவயானியை அமெரிக்க போலீசார் கைது செய்தனர்.
தேவ்யானியை போலீசார் கை விலங்கிட்டு அழைத்து சென்றதாகவும், அவரது ஆடைகளை களைந்து சோதனை செய்ததாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியானது. இந்திய தூதர் மிகவும் மோசமாக நடத்தப்பட்டதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. அதோடு அமெரிக்க தூதரகத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளை ரத்து செய்து பதிலடி கொடுத்தது.
தேவ்யானியின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து சங்கீதா அமெரிக்காவில் போராட்டம் நடத்தினார்.
இதையடுத்து, சங்கீதா அமெரிக்காவின் உளவாளி என்று தேவயானியின் தந்தை உத்தம் கோப்ரகேட் தெரிவித்து இருந்தார். அதனை நம்பும் வகையில், சங்கீதாவுக்கு அமெரிக்கா உதவியிருப்பது அம்பலமாகியுள்ளது.
வீட்டு பணிப்பெண்ணான சங்கீதா ரிச்சர்ட் அவரது கணவர் பிலிப் ரிச்சர்ட், இரண்டு குழந்தைகளுக்கும் சேர்த்து டெல்லியில் இருந்து நியூயார்க் செல்வதற்கான டிக்கெட் வழங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதற்கு வரி விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. தேவ்யானி கைது செய்யப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்பாக இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.