சீனாவிடம் மன்னிப்பு கேட்டது அமெரிக்கா... ஏன்? எதற்கு? பரபரப்பு தகவல்கள்
சீன ஜனாதிபதி ஜின்பிங்கை தைவான் ஜனாதிபதி என்று அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு சீனாவிடம் அமெரிக்கா மன்னிப்பு கோரியுள்ளது.
நியூயார்க் : சீன ஜனாதிபதி ஜின்பிங்கை தைவான் ஜனாதிபதி என்று அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்ததற்கு அமெரிக்கா மன்னிப்புக் கோரியுள்ளது.
ஜெர்மனியின் ஹேம்பர்க் நகரில் நடந்த ஜி20 மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜின் பிங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பு குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் ரிபப்ளிக் ஆப் சீனாவின் தலைவர் ஜி ஜின்பிங் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
பொதுவாக தைவான் நாட்டையே ரிபப்ளிக் ஆப் சீனா என்று குறிப்பிடுவதுண்டு. ஆனால் பீப்புள்ஸ் ரிபப்ளிக் ஆப் சீனா என்பதுதான் சீனாவின் அதிகாரப்பூர்வ பெயர் ஆகும்.
இந்த விவகாரம் தொடர்பாக சீனா தரப்பிலிருந்து கடுமையான எதிர்ப்புக் கிளம்ப, அமெரிக்க ஜனாதிபதி மாளிகை, செய்திக் குறிப்பில் ஏற்பட்ட பிழைக்காக சீனாவிடம் அமெரிக்கா மன்னிப்புக் கோரியிருக்கிறது.
இந்தத் தகவலை சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜென் ஷாங் உறுதிப்படுத்தியுள்ளார். கணினி தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தவறு நேர்ந்துவிட்டதாக அமெரிக்காவின் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஒருங்கிணைந்த சீனாவின் ஒரு பகுதியாகவே தைவான் நாட்டை சீனா கருதி வருகிறது. ஆனால், பெரும்பாலான தைவான் மக்கள் தங்களது நாட்டை தனி நாடாகவே பார்க்கின்றனர் என்பதால் இந்த பெயர் மாற்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.