ஓரினச் சேர்க்கை எதிர்ப்புச் சட்டத்தால் எரிச்சல்.. உகாண்டா மீது அமெரிக்கா சரமாரி தடை
இந்த சட்டம் அப்பட்டமான மனித உரிமை மீறல் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதையடுத்து பல்வேறு தடைகளை அது விதித்துள்ளது.
மேலும் மிகக் கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ள உகாண்டா அதிகாரிகள் சிலர் அமெரிக்காவில் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கேட்லின் ஹைடன் தெரிவித்துள்ளார்.
அதேபோல உகாண்டாவில் பெரும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்களுக்கும் அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்க அரசாங்கம் உகாண்டாவிற்கு அளித்து வந்த நிதி உதவிகளையும், அமெரிக்க ராணுவத்தால் வழங்கப்பட்ட விமான பயிற்சியையும் நிறுத்திவிட்டது.
இதற்கிடையே, சட்டத்திற்கு எதிராக கடும் எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து அதிபர் யோய்வ்ரி முசெவ்னி ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிரான சட்டத்தைத் திரும்பப் பெற்றுள்ளார்.
முன்னதாக கொண்டு வரப்பட்ட புதிய சட்டப்படி ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு 14 ஆண்டுகள் சிறைதண்டனையும், அவர்களில் எய்ட்ஸால் பாதிக்கப்பட்டோர், வயது வராதோருக்கு அதிகபட்ச தண்டனையும் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.