பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும்: அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்
வாஷிங்டன்: பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிக்கக் கோரும் மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2 எம்.பி.,க்கள் தாக்கல் செய்தனர்.
டெக்சாஸ் மாகாண உறுப்பினரான டெட் போ மற்றும் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த குடியரசுக் கட்சி பிரதிநிதி ரோஹ்ராபேச்சர் ஆகியோர் பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மசோதாவில் பல ஆண்டுகளாக பாகிஸ்தான் நம்பிக்கைக்கு உகந்த நாடாக இல்லை என்பதுடன், அமெரிக்காவின் எதிரி நாடுகளோடு உடந்தையாக இருந்து செயல்பட்டு வருகிறது. ஒசாமா பின்லேடன் மற்றும் ஹக்கானி குழுவுடன் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருந்ததற்கு தேவைக்கு அதிகமான ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன.
இதன் மூலம் தீவிரவாதத்துக்கு எதிரான போரில் பாகிஸ்தான் அமெரிக்காவின் பக்கம் இல்லை என்பதுடன், அந்நாடு யாருக்கு ஆதரவாக உள்ளது? என்பதை நிரூபிக்க நம்மிடம் தேவைக்கு அதிகமான ஆதாரங்கள் உள்ளன.
பாகிஸ்தான் சர்வதேச தீவிரவாதிகளுக்கு உதவியதா? இல்லையா? என இன்னும் 90 நாட்களுக்குள் அதிபர் பராக் ஒபாமா அறிக்கை வெளியிட வேண்டும். அதைத்தொடர்ந்து, அடுத்த 30 நாட்களுக்குள் பாகிஸ்தான் தீவிரவாத நாடுதான் என்றோ, அல்லது, அந்த வரையறைக்குள் பாகிஸ்தானை நிறுத்த போதுமான காரணங்கள் இல்லை என்றோ அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஜான் கெர்ரி விரிவான மற்றொரு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மசோதா மூலம் பாகிஸ்தான் அரசுக்கு சர்வதேச அளவில் நெருக்கடி அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.