தாஜ்மஹால் அருகே ஆளில்லா விமானத்தை பறக்கவிட்ட அமெரிக்கர் கைது
தாஜ்மஹால் அருகே ஆளில்லா விமானத்தை பறக்கவிட்ட அமெரிக்கர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி: தாஜ்மஹால் அருகே ஆளில்லா விமானத்தை பறக்கவிட்ட அமெரிக்கர் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க சர்வதேச நினைவுச் சின்னமான தாஜ்மஹாலிலும் அதைச் சுற்றியும் ஆளில்லா விமானம் உள்ளிட்ட பறக்கும் சாதனங்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்ட தடை அமலில் உள்ளது. இந்த நிலையில் சனிக்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் வெள்ளை நிற, சிறிய ரக ஆளில்லா விமானம் ஒன்று, தாஜ் மகால் அருகே இரண்டு முறை பறந்தது.
அதையடுத்து, போலீசாரும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும் இணைந்த கூட்டுப் படையினர் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். சில மணி நேரத்தில் அருகிலுள்ள ஓட்டல் ஒன்றின் மாடியில் இருந்து ஆளில்லா விமானத்தை இயக்கிய நபரை கைது போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் உயரதிகாரிகள், விசாரணையில் அவர் அமெரிக்காவின் ஒஹியோவைச் சேர்ந்த சுற்றுலாப்பயணி நிகோலஸ் என்பது தெரியவந்துள்ளது. போலீஸர் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில், ஆளில்லா விமானத்திலோ அல்லது நிக்கோலஸின் நடவடிக்கைகளிலோ சந்தேகத்துக்கிடமான வகையில் எதுவும் காணப்படவில்லை. எனினும், இதுதொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகிறோம். மேலும், டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கும் தகவல் தெரிவித்துள்ளோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.