உன்ன நம்பி தானடா வந்தேன்... ஜிபிஎஸ்சை நம்பி ஏரிக்குள் காருடன் பாய்ந்த அமெரிக்கர்
அமெரிக்காவில் ஜிபிஎஸ் கருவியை நம்பி காரை ஓட்டி சென்ற ஒருவர் காருடன் ஏரியில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
வாஷிங்டன்: வழிகாட்டி மென்பொருளை நம்பி காரை ஒட்டிச் சென்ற அமெரிக்கர் ஒருவர், எரியில் காருடன் விழுந்த சம்பவம் தொழில்நுட்பத்தை எந்த அளவு நம்பலாம் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
உலகமே தற்போது தொழில்நுட்பத்தின் உதவியுடன் தான் செயல்பட்டு வந்துக்கொண்டிருக்கிறது. அறுவை சிகிச்சை முதல் அண்டசராசரத்தை அளப்பது வரை தொழில்நுட்பம் மனித குலத்திற்கு பெரும் உதவியாக உள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் நடந்த சம்பவம் தொழில்நுட்பத்தை மக்கள் எந்த அளவிற்கு நம்பலாம் அல்லது சார்ந்திருக்கலாம் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
இரவல் கார்
அமெரிக்காவின் வெர்மொண்ட் என்ற பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது நண்பரின் காரை இரவலாக வாங்கி கொண்டு தன்னுடைய மற்ற நண்பர்களுடன் பர்லிங்கடன் நோக்கி சென்றுக்கொண்டிருந்தார். எஸ்யூவி மாடலான காரில் நெவிகேஷன் சிஸ்டம் எனப்படும் ஒட்டுனர்களுக்கு வழிகாட்டும் மென்பொருள் உதவியுடன் அவர் வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.
ஏரிக்குள் கார்
அப்போது திடீரென கார் ஒரு பள்ளத்தில் விழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் வெளியே வர முயற்சி செய்தனர். ஆனால் சில நொடிகளிலேயே காருக்குள் தண்ணீர் வர ஆரம்பித்து விட்டதால் காரிலிருந்த மூன்று பேரும் செய்வதறியாமல் திகைத்தனர். ஒரு கட்டத்தில் காரின் பின் கதவு வழியாக அனைவரும் வெளியே வந்து பார்த்த போது தான், கார் ஏரிக்குள் செலுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.
உயிர் தப்பினர்
நெவிகேஷன் ஆப்பை நம்பி காரை செலுத்திய நிலையில், உறைந்து போன ஏரியில் கார் செலுத்தப்பட்டிருப்பதை உணர்ந்து காரிலிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் மூன்று பேரையும் மீட்டு, மூழ்கிய காரையும் வெளியே எடுத்தனர்.
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
வேஸ் எனப்படும் நெவிகேஷன் மென்பொருள் தான் இந்த பிரச்சனை காரணம் என்று கூறப்படும் நிலையில், இதனை தொழில்நுட்பங்களின் ஜாம்பவான் எனப்படும் கூகுள் நிறுவனம் தான் நடத்தி வருவது தான் அதிர்ச்சியான செய்தி.