பெற்ற தாயை கொடூரமாகக் கொன்று நெஞ்சைக் கிழித்து இதயத்தை கையால் எடுத்த கொடூரன்!
கலிபோர்னியா: அமெரிக்காவில் 31 வயதான நபர் தனது தாயை மிகக் கொடூரமாகக் கொன்று இதயத்தை வெறும் கைகளாலேயே வெளியே எடுத்த வெறிச் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் நடந்து ஐந்து நாட்கள் கழித்துத்தான் போலீஸாருக்குத் தகவல் தெரிய வந்தது. தற்போது இவரை கைது செய்துள்ளனர் போலீஸார்.
தனது தாயுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று பின்னர் இவ்வாறு மோசமாக நடந்துள்ளார் இந்த நபர்.
கலிபோர்னியாவின் பிரிமான்ட் பகுதியைச் சேர்ந்தவர் 31 வயதான ஓமர் பெட்டிஜென். இவரது தாயார் நைலா பெட்டிஜென். 64 வயதான இவர் முன்னாள் கணித ஆசிரியை ஆவார்.
நைலாவின் கணவர் அவரை விட்டுப் பிரிந்து போய் விட்டார். நியூ மெக்சிகோவில் அவர் வசித்து வருகிறார். தனது ஒரே மகனுடன் வசித்து வந்தார் நைலா.
சம்பவத்தன்று நைலாவுக்கும், மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மகன் முரட்டுத்தனமாக நடக்கவே துப்பாக்கியை எடுத்து சுட்டுவிடுவதாக மிரட்டியுள்ளார் நைலா. இதனால் கோபமடைந்த ஒமர், துப்பாக்கியை ஒரு சுத்தியலால் தட்டி கீழே தள்ளினார். பின்னர் தனது தாயாரைத் தாக்கினார். பிறகு இன்னொரு துப்பாக்கியை எடுத்து தாயாரை பெற்ற தாய் என்றும் பார்க்காமல் நான்கு முறை சுட்டார். இதில் சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார் நைலா.
அதன் பின்னர் கத்தியை எடுத்து தனது தாயாரின் கழுத்தை அறுத்துள்ளார். பின்னர் மார்புப் பகுதி வரை உடலைக் கிழித்த அந்த நபர் இதயத்தை கையால் எடுத்து வெளியில் எடுத்து போட்டுள்ளார்.
தனது மகனிடமிருந்து போன் எதுவும் வராததால் சந்தேகமடைந்த அவரது தந்தை போலீஸாருக்குப் போன் போட்டு என்ன ஆனது என்று பார்க்கக் கூறியுள்ளார். போலீஸார் வீட்டுக்கு வந்து பார்த்தபோதுதான் நடந்த கொடூரம் தெரிய வந்து அதிர்ந்தனர். இதையடுத்து ஒமர் கைது செய்யப்பட்டார்.
நைலா மொத்தம் 7 முறை சுடப்பட்டுள்ளதாக போலீஸார் கூறியுள்ளனர். அவரது உடலை அறுத்து கொடூரமாக நடந்துள்ளார் ஒமர்.
கைது செய்யப்பட்ட ஒமர் போலீஸாரிடம் கூறுகையில் எனது தாயார் முழங்கால் மற்றும் இடுப்பு பிரச்சினை தொடர்பாக அறுவைச் சிகிச்சை செய்து கொண்டனர். அதன் பின்னர் அவர் பெயின் கில்லர்களுக்கு அடிமையாகி விட்டார். இதனால் அவரது உடல் நிலை மோசமடைந்து விட்டது. இதுதொடர்பாக அவரிடம் வாக்குவாதம் ஏற்பட்டது என்று கூறியுள்ளார்.
தனது தாயாரைக் கொலை செய்த பின்னர் வெளியில் போன ஒமர் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார் என்றும் தெரிய வந்தது.