82 வயது சீக்கியரை இனவெறியுடன் தாக்கிய அமெரிக்கருக்கு 13 ஆண்டு சிறைத் தண்டனை
கலிபோர்னியா: அமெரிக்காவில் 82 வயதான சீக்கிய முதியவரை இரும்புக் கம்பியால் தாக்கிய நபருக்கு அந்த நாட்டு கோர்ட் 13 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஃபிரெஸ்னோ என்ற இடத்தில் சீக்கியர்களின் குருத்வாரா ஒன்றுள்ளது. இந்த குருத்வாராவில் பியாரா சிங் என்பவர் தன்னார்வத் தொண்டராகப் பணியாற்றி வந்தார். தற்போது அவருக்கு 84 வயதாகிறது.
கடந்த 2013 ஆம் ஆண்டு மே 5ம் தேதி காலை குருத்வாராவின் வாசலில் பியாரா சிங் நின்று கொண்டிருந்தார். அப்போது, இரும்பு தடியுடன் வந்த அடையாளம் தெரியாத ஒரு நபர், பியாரா சிங்கை கண்மூடித்தனமாக தாக்கினார்.
அப்போது தலிபான்களுக்கு எதிராகவும், முஸ்லீம்களுக்கு எதிராகவும் அவர் கோஷமிட்டபடி தாக்கினார். இதில் மயக்கமடைந்து ரத்த வெள்ளத்தில் விழுந்தார் பியாரா சிங். உடல் முழுவதும் தாக்கப்பட்டதால் எலும்பு முறிவு ஏற்பட்ட பியாரா சிங்குக்கு 20 தையல்கள் போடப்பட்டன.
அப்பகுதியில் சீக்கியர்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதி சீக்கியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தாக்குதல் நடத்திய கில்பர்ட் கார்சியா என்ற அமெரிக்க வாலிபர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையின்போது முஸ்லீம் தீவிரவாதி என்று நினைத்து பியாரா சிங்கைத் தாக்கியதாக அந்த நபர் வாக்குமூலம் அளித்தார். அவர் மீது மத வெறியுடன் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தற்போது கில்பர்ட்டுக்கு 13 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிபதி மூன்றாம் ஆல்வின் ஹாரெல் தீர்ப்பளித்துள்ளார்.
இந்தத் தீர்ப்பை சீக்கியர்கள் சமுதாயத்தைச் சேர்ந்த இகே கிரேவல் வரவேற்றுளார். தங்களது சமுதாயத்திற்கு நீதி கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.