வேட்டையாடு... விளையாடு... பாகிஸ்தானில் ரூ. 78 லட்சம் செலுத்திய அமெரிக்கர்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் தேசிய விலங்கான மார்கோரை வேட்டையாட, அமெரிக்கர் ஒருவர் ரூ.78 லட்சம் கட்டணமாக செலுத்தியுள்ளார்.
மார்கோர் என்பது வனப்பகுதியில் நீண்ட தலைமுடி மற்றும் சுருளான கொம்புகள் உடைய ஒரு அபூர்வ ஆடு ஆகும். வனப்பகுதியில் காணப்படும் இந்த மார்கோர் ஆடு பாகிஸ்தான் நாட்டின் தேசிய விலங்காகும்.
இந்நிலையில் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடும் பந்தயம் அவ்வப்போது நடத்தப்படுவதுண்டு. அந்த வகையில் கில்ஜித் பகுதியில் மார்கோரை வேட்டையாடும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவைச் சேர்ந்த பிரயான் ஹர்லான் பங்கேற்றார். சாசி லார்மோஸ் குடிமக்கள் அதிகமாக வசிக்கும் சாசி என்ற கிராமத் ஒட்டிய வனப்பகுதியில் அவர், மார்கோர் ஆட்டை வேட்டையாடினார்.
மிகப்பெரிய தொகை
இந்த ஆட்டுக்காக கில்ஜித்- பலுசிஸ்தான் வனத்துறைக்கு பிரயான் ஹர்லான், சுமார் ஒரு லட்சத்து 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களை கட்டணமாக செலுத்தியுள்ளார். இந்திய மதிப்பில் 78 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் ஆகும். இதுதான் பாகிஸ்தானில் அனுமதிக்கப்பட்ட வனவிலங்கு வேட்டையில், ஒருவர் கட்டிய அதிகப்படியான தொகையாகும்.
50 விலங்குகள் வேட்டை
முன்னதாக, ஜனவரி 21 ம் தேதி மற்றொரு அமெரிக்க குடிமகனான டயானா கிறிஸ்டோபர் அந்தோனி என்பவர் 1 லட்சத்து 5 ஆயிரம் அமெரிக்க டாலர்களை கட்டணமாக செலுத்தி உள்ளார். 2018 - 19 ஆண்டுகளில் 41 அகல மார்கோர் கோப்பைக்காக 50 வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்டையாட வேண்டாம்
இருப்பினும், வேட்டையாடப்படுவதால் மார்கோர் இன ஆடுகள் வெகுமளவில் குறைந்து விட்டதாக மலைகிராம மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மார்கோரை வேட்டையாடுவதற்கு பதிலாக அதனை பாதுகாக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்0,
வனத்துறை விளக்கம்
இதற்கிடையே, வேட்டையாடுவதற்காக செலுத்தப்படும் கட்டணங்களில் 80 சதவீதம் மலை கிராம மக்களின் வளர்ச்சிக்காக செலவிடப்படுவதாகவும், அதே நேரம், மார்கோர் இன ஆடுகளின் இனப் பெருக்கம் அதிகரித்து தான் வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.