பேஸ்புக், வாட்ஸ் ஆப் விவரங்களையும் கொடுக்க வேண்டும்.. அமெரிக்க விசாவிற்கு புதிய கெடுபிடி!
அமெரிக்க விசா பெற இனி சமூக வலைதள விவரங்களையும் கொடுக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட உள்ளது.
நியூயார்க்: அமெரிக்க விசா பெற இனி சமூக வலைதள விவரங்களையும் கொடுக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட உள்ளது.
அதன்படி இனி அமெரிக்கா செல்ல விரும்பும் மக்கள் தங்களுடைய பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம், இமெயில் உள்ளிட்ட விவரங்களை அமெரிக்க தூதரகத்திடம் சமர்ப்பித்தால் மட்டுமே, விசா கிடைக்கும். இன்னும் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வாங்கப்படவில்லை.
எச்-1பி விசா முறையில் பெரிய மாற்றம் எதுவும் இதுவரை கொண்டுவரப்படாத நிலையில் இந்த புதிய சட்டம் கொண்டுவரப்பட உள்ளது. இது மக்களின் அந்தரங்கங்களை பெரிய அளவில் பாதிக்கும்.
எல்லா தகவலும்
சோஷியல் மீடியா மட்டுமில்லாமல் இன்னும் நிறைய தகவல்களும் இனி வரும் காலங்களில் கேட்கப்பட உள்ளது. அதன்படி கடந்த ஐந்து வருடத்தில் பயன்படுத்திய தொலைபேசி எண்கள், இ மெயில் ஐடிக்கள், சுற்றுலா சென்ற இடங்கள், சுற்றுலா சென்ற காரணங்கள் எல்லாம் கேட்கப்பட உள்ளது.
முன்பு எப்படி
இதற்கு முன்பு சில முக்கியமான நபர்களிடம் மட்டுமே இந்த விவரங்கள் வாங்கப்படும். முக்கியமாக அமெரிக்க அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தால் மட்டுமே இந்த விவரங்களை அந்த நாட்டு வெளியுறவுத்துறையின் அனுமதியுடன் வாங்கி கொண்டு இருந்தார்கள். ஆனால் இப்போது அங்கு சுற்றுலா செல்லும் நபர்கள் கூட விவரங்களை அளிக்க வேண்டும்.
காரணம்
தீவிரவாத சதி செயல்களை கட்டுப்படுத்த, தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. உங்களது கூகுள் மேப் விவரங்களை வைத்து நீங்கள் எங்கு சென்றுள்ளீர்கள், அங்கு தீவிரவாதம் இருக்கிறதா என்றெல்லாம் விசாரணை செய்வார்கள். உங்கள் சமூக வலைதளத்தில் தீவிரவாதம் பற்றி பேசி இருக்கிறீர்களா என்றும் விசாரணை செய்வார்கள்.
பாதிப்பு
ஏப்ரலில் இருந்து இந்த விவர சேகரிப்பு நடைமுறைக்கு வரலாம். இதனால் இந்தியர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டு இருக்கிறது. சுமாராக 7,10,000 வெளிநாட்டு மக்கள் இந்த புதிய விசா விதிமுறை மூலம் பாதிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.