அடிமடியில் வைக்க பார்த்த அமெரிக்கா.. கொதித்துப்போன ஜி ஜின் பிங்.. சீனா வீரர்களுக்கு முக்கிய உத்தரவு
பெய்ஜிங்: தைவான் விவகாரத்தில் அமெரிக்கா மூக்கை நுழைத்து, அந்த நாட்டுடன் நல்லுறவை பேணி வருவதால் கொதித்துப்போன சீன அதிபர் ஜி ஜின்பிங் வீரர்களை தயாராக இருக்குமாறு அலார்ட் செய்துள்ளார்.
சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பதட்டங்கள் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக தைவான் மற்றும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது.
சீனாவின் தன்னாட்சி பிரதேசமான தைவானின் உள் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதை ஆரம்பம் முதலே சீனா கடுமையாக எதிர்த்து வருகிறது. ஆனால் சீனாவின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா தைவான் அரசுடன் நெருக்கமான உறவை கடைபிடிக்க விரும்புகிறது.
"போருக்கு தயாராகுங்கள்.." சீன ராணுவத்திற்கு அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவு!
அமெரிக்கா உதவி
இதன் ஒரு பகுதியாக தைவானுக்கு ஹை மொபிலிட்டி பீரங்கி ராக்கெட் சிஸ்டம் (ஹிமார்ஸ்) உள்ளிட்ட மூன்று மேம்பட்ட ஆயுத அமைப்புகளை விற்பனை செய்ய அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த தகவல் சீனாவிற்கு சென்றதும், அந்த நாடு பொங்கி எழுந்துவிட்டது.
ரத்து செய்ய வேண்டும்
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன் அமெரிக்காவுக்கு கடும் பதிலடி கொடுத்துள்ளார். "தைவானுக்கான எந்தவொரு ஆயுத விற்பனை திட்டங்களையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்" என்றும் "அமெரிக்க-தைவான் இராணுவ உறவுகள்" அனைத்தையும் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
சீனா ஆளுமை
சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, தைவானை ஒருபோதும் கட்டுப்படுத்தவில்லை என்றாலும், தங்கள் நாட்டின் சுயாட்சி பெற்ற ஒரு மாநிலம் என்றே கருதுகிறது. , தேவைப்பட்டால் அதைக் கைப்பற்ற ராணுவ சக்தியை பயன்படுத்தவும் தயாராகவே உள்ளது. ஆனால் இதுவரை அப்படி செய்தது இல்லை.
திடீர் தைவான் விஜயம்
எனினும் அண்மைக்காலத்தில் அமெரிக்கா மற்றும் தைவான் இடையேயான உறவுகள் டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தின் கீழ் நெருக்கமாகிவிட்டன. ஆகஸ்டில், அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைகள் செயலாளர் அலெக்ஸ் அசார் பல ஆண்டுக்கு பிற்கு தைவானுக்கு விஜயம் செய்த மிக உயர்ந்த அமெரிக்க அதிகாரியாவார். அவர் கொரோனா தொற்றுநோயைப் பற்றி விவாதிக்க தைவானுக்கு சென்றார்.
அதிர்ந்த அமெரிக்கா
அப்போது சீனா செய்த செயல் அமெரிக்காவையே அதிரவைத்தது. சீனா தைவான் நாட்டின் எல்லையை சுற்றி இராணுவப் பயிற்சிகளை அதிகரித்தது. செப்டம்பர் 18-19 அன்று ஏறக்குறைய 40 சீனப் போர் விமானங்கள் பிரதான நிலப்பகுதிக்கும் தைவானுக்கும் இடையிலான சராசரி கோட்டைக் கடந்து பறந்தன.
என்ன பேசினார்
செப்டம்பர் 16 ம் தேதி அன்று அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பர் பேசுகையில் "கடற்படை சக்தியைப் பொறுத்தவரை சீனா "அமெரிக்காவுக்கு பக்கத்தில் கூட வர முடியாது. மோசாமான மதிப்புள்ள நாடு சீனா... "(சீனாவும் ரஷ்யாவும்) கொள்ளையடிக்கும் பொருளாதாரம், அரசியல் அடிபணிதல் மற்றும் இராணுவ சக்தியை அதிகார சமநிலையை தங்களுக்கு சாதகமாக மாற்றும் முயற்சிகளை இவை மேற்கொள்கின்றன. அதை பெரும்பாலும் இழப்புகளை சந்தித்தத மற்ற நாடுகளில் தான் செய்கின்றன" என்றார். அத்துடன் அக்டோபர் தொடக்கத்தில், அமெரிக்காவின் "போர் படை 2045" திட்டத்தையும் எஸ்பர் அறிவித்தார், 2045 க்குள் 500 மனிதர்களே இல்லாத கப்பல்களைக் கொண்ட விரிவாக்கப்பட்ட மற்றும் நவீனமயமாக்கப்பட்ட அமெரிக்க கடற்படை அமைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
வீரர்களை உற்சாகமூட்டினார்
இதனிடையே சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று அந்த நாட்டின் தெற்கு மாகாணமான குவாங்டாங்கில் உள்ள சாவோஜோ நகரில் ராணுவத் தளத்திற்கு சென்றார். அப்போது அங்கு கூடியிருந்த ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய அவர், உங்கள் மனதையும், சக்தியையும் போருக்குத் தயாராக வைத்திருக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். கடற்படையினரை சந்தித்த அவர், அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு வலியுறுத்தினார். கடற்படையினரை "முற்றிலும் விசுவாசமானவர்கள், முற்றிலும் தூய்மையானவர்கள், மற்றும் முற்றிலும் நம்பகமானவர்கள்" என்று அவர்கள் அழைத்து உற்சாகப்படுத்தினார்.
பொருளாதார மண்டலம்
ஜின்பிங்கின் குவாங்டாங்கின் வருகையின் முக்கிய நோக்கம் 1980 ல் வெளிநாட்டு மூலதனத்தை ஈர்ப்பதற்காக நிறுவப்பட்ட ஷென்ஜென் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் 40 வது ஆண்டு நிறைவை நினைவுகூறும் விதமாக உரையாற்ற வந்தார். ஏனெனில் இதுதான் உலக அளவில் சீனாவின் பொருளாதாரத்தில் இரண்டாவது பெரியதாக மாற்றததை ஏற்படுத்த உதவியதில் முக்கிய பங்கு வகித்தது.