வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை கிடையாது.. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை கிடையாது என அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது.
வாஷிங்டன்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடனான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
வடகொரியாவின் அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நிலவியது. மேலும் அமெரிக்காவின் அலாஸ்கா தூரத்திற்கு அணு ஆயுத ஏவுகணைகளை சோதனை செய்தது அமெரிக்காவையும் மிரட்டி வந்தது வடகொரியா.
இதனால் அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே எப்போது வேண்டும் போர் வெடிக்கலாம் என்ற சூழல் நிலவி வந்தது. இந்நிலையில் கொரிய தீபகற்பத்தில் நிலவிய போர் பதற்றத்தை தணிக்க தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். அதன் பலனாக தென்கொரியாவில் அண்மையில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது.
சிறப்பு விருந்தினர்
குளிர்கால ஒலிம்பிக் தொடக்க விழாவில் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் தங்கை கிம் யோ ஜோங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வடகொரியாவின் அழைப்பின்பேரில் தென்கொரிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சுங் உய்-யோங் தலைமையிலான 10 பேர் குழு கடந்த மார்ச் மாதம் வடகொரியா சென்றது.
ட்ரம்புடன் சந்திப்பு
அந்த குழுவினர் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னைச் சந்தித்துப் பேசினர். அப்போது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை சந்திக்க விரும்புவதாக கிம் கூறினார். இதைத் தொடர்ந்து சுங் உய்-யோங் அமெரிக்கா சென்று அதிபர் டொனால்டு ட்ரம்பை சந்தித்துப் பேசினார்.
ஏற்றுக்கொண்ட ட்ரம்ப்
அப்போது வடகொரிய அதிபர் கிம்மின் விருப்பத்தை ட்ரம்பிடம் கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட ட்ரம்ப், வரும் மே மாதம் கிம்மை சந்தித்துப் பேச தயார் என்று அறிவித்தார். இதற்கு முன்னோட்டமாக அமெரிக்கா, வடகொரியா, தென்கொரிய வெளியுறவு அதிகாரிகள் பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் சந்தித்துப் பேசினர்.
ஜூன் 12ல் சந்திப்பு
இதைத்தொடர்ந்து வரும் ஜூன் 12ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் சிங்கப்பூரில் சந்தித்து பேசவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இருதுருவங்களாக இருக்கும் அமெரிக்க அதிபரும் வடகொரிய அதிபரும் சந்தித்து பேசவுள்ளதாக வெளியான தகவலால் உலக நாடுகள் மகிழ்ச்சியடைந்தன.
ஆர்வத்துடன் இருந்தேன்
இந்நிலையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடன் பேச்சுவார்த்தை கிடையாது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்கா - வட கொரியா அதிபர்கள் சந்திப்பை கைவிடுவதாக வெள்ளை மாளிகை வெளியிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் தரப்பில் வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுக்கு எழுதிய கடிதத்தில் அவரைச் சந்திக்க ஆர்வத்துடன் காத்திருந்ததாகக் கூறியுள்ளார்.
சரியாக இருக்காது
ஆனால் வடகொரியாவின் சமீபத்திய அறிக்கையில் கடும் கோபமும், வெளிப்படையான விரோதமும் தெரிவதால், இத்தகைய சூழலில் நெடுநாட்களாகத் திட்டமிட்ட சந்திப்பு நடப்பது சரியாக இருக்காது என தாம் கருதுவதாகவும் அதில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
கடாஃபியை போல்
அண்மையில் அமெரிக்க துணை அதிபர் மைக்பென்ஸ் அறியாமையிலும், முட்டாள்தனமாகவும் கருத்துக்களை தெரிவித்திருப்பதாக வடகொரியா குற்றம்சாட்டியது. இதற்கு பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்த மைக்பென்ஸ், பேச்சுவார்த்தை விவகாரத்தில் வடகொரியா அமெரிக்காவுடன் ஏதேனும் விளையாட நினைத்தால் அது பெரும் தவறாக முடியும் என்றும் வடகொரிய அதிபர் லிபியாவின் கடாஃபியைப் போன்று கொல்லப்படுவார் என்றும் எச்சரித்தார்.
அமெரிக்காவுக்கு எச்சரிக்கை
இதைத்தொடர்ந்து வடகொரிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் சோ சான் ஹுய் தனது அறிக்கையில் மைக் பென்ஸ் ஆணவமான கருத்துக்களை வெளியிட்டிருப்பதாக குற்றம்சாட்டினார். பேச்சு வார்த்தைக்காக தாங்கள் அமெரிக்காவை கெஞ்சப் போவதில்லை என்றும் தங்கள் நல்லெண்ண நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்கா நடந்துகொண்டால் பேச்சுவார்த்தையை மறுபரிசீலனை செய்ய தங்கள் நாட்டுத் தலைமைக்கு பரிந்துரைக்க நேரிடும் என்று கூறியிருந்தார். அத்துடன் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் தங்களின் அணு ஆயுத பலத்தைக் காட்ட நேரிடும் எனவும் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.