மாஸ்க் இல்லாமல் தேர்தல் பிரச்சாரம் செய்யும் ட்ரம்ப் - காற்றில் பறந்த தனி மனித இடைவெளி
கொரோனா நெகட்டிவ் என்று வந்த உடனேயே மாஸ்க்கை கழற்றி வீசி விட்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்து விட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். தனி மனித இடைவெளி காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.
புளோரிடா: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்த உடனேயே தேர்தல் பிரச்சாரத்திற்கு கிளம்பி விட்டார். புளோரிடாவில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற ட்ரம்ப் மாஸ்க் அணியாமல் பங்கேற்றதோடு தனி மனித இடைவெளியும் கடைபிடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அமெரிக்காவில் 80 லட்சம் பேர் கொரோனா வைரஸ் நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதிபர் தேர்தல் நவம்பரில் நடைபெற உள்ளது. குடியரசுக்கட்சியின் வேட்பாளராக தற்போதைய அதிபர் ட்ரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் வேட்பாளராக ஜே பிடன் போட்டியிடுகிறார்.
தேர்தல் பிரச்சாரத்தில் பிஸியாக இருந்த ட்ரம்பிற்கு கடந்த 1 ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டது. ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ட்ரம்ப் குணமடைந்து வீடு திரும்பினார். வெள்ளை மளிகையில் பணியை தொடங்கிய ட்ரம்புக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் கூறினர். இதனையடுத்து தனது நோய் எதிர்ப்பு சக்தி பற்றி ட்விட்டரில் பதிவிட்டார் ட்ரம்ப்.
சீனா வைரஸ் கொரோனாவை தான் வென்று விட்டதாகவும், கொரோனா பாதிப்பு தனக்கு கடவுள் கொடுத்த வரமாக கருதுவதாகவும் தெரிவித்தார் ட்ரம்ப். ட்ரம்பிற்கு கொரோனா பரிசோதனை மீண்டும் செய்யப்பட்டதில் நெகட்டிவ் வந்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் புளோரிடாவில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி பேசியுள்ளார்.
எனது சொந்த மாநிலமான புளோரிடாவில் நான் மீண்டும் பிரச்சாரத்திற்கு திரும்பி வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் உங்கள் பிரார்த்தனைகளால் மிகவும் உற்சாகமடைந்துள்ளேன். உங்கள் ஆதரவுக்கு நான் தலை வணக்குகிறேன் என்று கூறினார் ட்ரம்ப். அத்துடன் தற்போது சக்தி வாய்ந்தவனாக உணர்வதாகவும், அனைவரையும் முத்தமிட விரும்புவதாகவும் தெரிவித்தார்.
நவம்பரில் நடைபெற உள்ள தேர்தலில் எப்படியும் வென்றுவிட வேண்டும் என்று முனைப்பு காட்டி வரும் டிரம்ப், கொரோனா நெகட்டிவ் வந்த ஒரு சில நாளிலேயே தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றுள்ளார். கொரோனா தாக்குவதற்கு முன்பு மாஸ்க் அணிவதை தவிர்த்து வந்த ட்ரம்ப், சிகிச்சைக்கு போகும் போது மாஸ்க் அணிந்தபடி சென்றார். தற்போது நெகட்டிவ் என்று வந்த நிலையில் மீண்டும் பிரச்சாரத்திற்கு கிளம்பிவிட்டார் ட்ரம்ப்.
புளோரிடாவில் நடைபெற்ற பிரச்சாரத்தின் போது மாஸ்க் அணியாமல் பேசினார் ட்ரம்ப். அவரது பேச்சை கேட்க வந்த பலரும் மாஸ்க் அணியவில்லை, தனி மனித இடைவெளியும் கடைபிடிக்கவில்லை. ட்ரம்ப் ஆதரவாளர்கள் பலரும் தோளோடு தோளோடு உரசியபடி நின்று கொண்டிருந்தனர்.
Corona: ட்ரம்ப் குணமடைய பட்டினி இருந்து பிரார்த்தனை செய்த தெலங்கானா விவசாயி உயிரிழப்பு!!
தனக்கு முழு நோய் எதிர்ப்பு சக்தி வந்துள்ளதாக கூறும் டிரம்ப் கொரோனா விதிமுறைகளை ஒரு நாள் கூட முறையாக கடைபிடித்தது இல்லை. புளோரிடாவைத் தொடர்ந்து பென்சில்வேனியா, அயோவா, வட கரோலினா மற்றும் விஸ்கான்சினில் மாகாணங்களில் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ளப்போகிறார் ட்ரம்ப்.