ஹிரோஷிமாவில் ஒபாமா.. அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதலில் பலியானோருக்கு மரியாதை
டோக்கியோ: 2-ம் உலகப்போரின் போது அமெரிக்காவால் அணு குண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்ட ஜப்பானின் ஹிரோஷிமாவுக்கு அமெரிக்கா அதிபர் ஒபாமா வரலாற்று சிறப்புமிக்க பயணம் மேற்கொண்டு அங்குள்ள நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
1945-ம் ஆண்டு ஆகஸ்ட் 6.ம் தேதி வரலாற்றில் மறக்க முடியாத நாளாகும். அந்நாளில் நடைபெற்றுக் கொண்டிருந்த 2-வது உலகப்போரின்போது, அமெரிக்கா ‘லிட்டில் பாய்' என்ற அணுகுண்டை ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா நகரத்தின் மீது போட்டது. இதில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர், இந்த சம்பவம் நிகழ்ந்த அடுத்த சில மூன்று நாட்களில் மேலும் ஒரு அணு குண்டை ஜப்பானின் நாகசாகி நகரிலும் அமெரிக்கா போட்டது. இதில் 75 ஆயிரம் போர் கொல்லப்பட்டனர்.
இந்த இரண்டு அணுகுண்டு வீச்சுகளும் வரலாற்றில் மறக்கமுடியாத தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, எந்தளவுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்தன.
இந்த மாபெரும் தாக்குதல் நடத்தியதின் விளைவாக, அமெரிக்காவின் அதிபர்கள் யாரும் அந்த நகருக்கு தமது பதவிக்காலத்தில் சென்றதே இல்லையாம். ஜிம்மி கார்ட்டரும் பதவிக்காலம் முடிந்த பின்னர்தான் ஹிரோஷிமாவுக்கு சென்றார்.
இந்த நிலையில் ஜப்பானில் உள்ள ஷிமா நகரில் ‘ஜி-7' அமைப்பு நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஒபாமா அந்நாட்டுக்கு சென்றிருந்தார். அவர் ஹிரோஷிமாவில் தாக்குதல் நடந்த இடத்திற்கும் சென்றிருந்தார். இந்த பயணத்தின் மூலமாக ஹிரோஷிமாவுக்கு தனது பதவிக்காலத்தில் சென்ற முதல் அமெரிக்க அதிபர் என்ற சிறப்பை ஒபாமா பெற்றிருக்கிறார்.
ஹிரோஷிமாவில் அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நினைவாக அங்கு அணையா விளக்குடன் கூடிய நினைவு சின்னம் உள்ளது. அங்கு சென்ற ஒபாமா நினைவுச்சின்னத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
அப்போது பேசிய ஒபாமா, வேதனை நிறைந்த பிளவைக்கூட உறவுவின் மூலம் இணைக்கமுடியும் என்பதற்கு இந்த பயணம் சான்று. இரண்டாம் உலகப்போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதற்கு இது ஒரு வாய்ப்பு. உலகில் இனி அணு ஆயுதங்கள் தேவை இல்லை என்ற நிலையில், உலக அமைதியையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கான வாய்ப்பாக இந்த பயணம் அமைந்துள்ளது. மேலும் உலகின் பலம் வாய்ந்த உறவுகளில் ஒன்றாக அமெரிக்கா-ஜப்பான் உறவு அமைந்துள்ளது என்றார்.